மணிவண்ணன் என் கதையை திருடிட்டான் என மணிவண்ணனிடமே வந்து புகார் கொடுத்த கதாசிரியர்.. ஏப்பா இப்படி??

Published on: February 2, 2023
Manivannan
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், காமெடி கலந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து “நிழல்கள்”, “அலைகள் ஓய்வதில்லை”, “ஆகாய கங்கை”, “காதல் ஓவியம்” போன்ற திரைப்படங்களில் கதாசிரியராக பணிபுரிந்தார்.

Manivannan
Manivannan

1982 ஆம் ஆண்டு வெளிவந்த “கோபுரங்கள் சாய்வதில்லை” திரைப்படத்தின் மூலமாகத்தான் மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து “நூறாவது நாள்”, “24 மணி நேரம்”, “ஜல்லிக்கட்டு”, “அமைதிப்படை” போன்ற பல வெற்றித்திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடியனாகவும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் பிரபல நடிகரும் கண்ணதாசனின் மகனுமான அண்ணாதுரை கண்ணதாசன், மணிவண்ணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு நகைச்சுவை சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

Annadurai Kannadasan
Annadurai Kannadasan

அதாவது மணிவண்ணன் தனது நண்பர்கள் பலருடன் ஒரு நாள் டிரைவ் இன் உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் காரை நிப்பாட்டி அரட்டை அடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நின்றிருந்த கேமராமேனும் நடிகருமான ராஜசேகரிடம் “சார் இப்போ ஒரு காமெடி பார்க்குறீங்களா?” என கூறினாராம்.

அப்போது அங்கே ஒருவர் தனது கையில் ஃபைல் ஒன்றை ஏந்திக்கொண்டு ஹோட்டலுக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தாராம். அவரை ஏற்கனவே அதற்கு முன் ஒரு முறை மணிவண்ணன் சந்தித்திருக்கிறார். அவரை அருகே அழைத்த மணிவண்ணன் “அன்றைக்கு உன்னோட கதையை யாரோ திருடிட்டாங்கன்னு சொல்லிட்டு இருந்தியே, அதை பத்தி கொஞ்சம் சொல்லேன்” என கூறினாராம்.

அதற்கு அந்த நபர் “சார், ஒரு சூப்பரான த்ரில்லர் கதை எழுதியிருந்தேன் சார். அந்த கதையை எப்படியாவது படமாக்கிடனும்ன்னு டைரக்டர் மணிவண்ணன் கிட்ட சொன்னேன் சார். அப்படியே திருடி 24 மணி நேரம்ன்னு படம் எடுத்திட்டான் சார் அவன்” என கூறினாராம்.

Manivannan
Manivannan

அதற்கு மணிவண்ணன் “அந்த மணிவண்ணனை பிடிச்சி சப் சப்ன்னு அடிக்க வேண்டியதுதானே” என்று கூறினாராம். அதற்கு அந்த நபர் “நான் போய் என்ன ஏன் கதையை காப்பி அடிச்சிட்டியேன்னு அவன் கிட்டப்போய் கேட்டேன். அதுக்கு அவன் நீங்க வேற கதையை சொல்லுங்க, நாம படம் பண்ணலாம் என சொன்னான். அவன் கேட்டானே என்று நானும் இன்னொரு கதையை கூறினேன். அந்த கதையையும் மணிவண்ணன் காப்பி அடிச்சி படம் எடுத்துட்டான் சார்” என மணிவண்ணனிடமே கூறிக்கொண்டிருந்தார்.

அதற்கு மணிவண்ணன் “இனிமே மணிவண்ணனை நேர்ல பார்த்தா, அவன் சட்டையை பிடிச்சி டேய் மணிவண்ணா இனிமே என் கதையை காப்பி அடிச்சா உன்ன பிச்சிப்புடுவேன்டான்னு அவன் கிட்ட சொல்லனும் சரியா” என கூறி அவரை அனுப்பிவைத்தாராம்.

அந்த நபர் அங்கிருந்து போன பின்பு கேமரா மேன் ராஜசேகரிடம் “பாருங்க, நான்தான் மணிவண்ணன்னே அவனுக்கு தெரியல. ஆனா நான் கதையை திருடினேன்னு ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு திரியுறான்” என மணிவண்ணன் கேலி செய்தாராம்.

இதையும் படிங்க: சிவாஜியை பார்த்து மிரண்டுப்போன பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆர் படத்தில் அறிமுகமான சுவாரஸ்ய சம்பவம்…

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.