பாடல் காட்சியின் போதும் உடன் ஆடும் நடிகையைத் தொடாத ஒரே பண்பான நடிகர் இவர் தான்…!

Published on: May 18, 2022
---Advertisement---

யாருடைய தயவுமில்லாமல் தன்னம்பிக்கையை ஒன்றே ஆயுதமாகக் கொண்டு பல தடைகளைக் கடந்து வெற்றி பெற்றவர் தான் இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர். தான் ஒழுக்கமானவர் என்பதை சினிமாவில் நடிக்கும்போதும், நிஜ வாழ்விலும் தொடர்ந்து நிரூபித்து வருபவர்.

நெளிவு சுழிவு இல்லாமல் தன் மனதில் பட்டதை நேரடியாக தைரியமாகச் சொல்லும் தனித்திறனே இவரது சிறப்பு.

80களில் கமல், ரஜினிக்கே டப் கொடுத்த நடிகர் யார் என்றால் அது டி.ராஜேந்தர் தான். இவரது படங்கள் என்றாலே அப்போது வெள்ளி விழா தான். இவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே முன்னணி ஹீரோக்கள் சற்று ஒதுங்கிக் கொள்வார்களாம்.

T.Rajendar

ரஜினி, கமலுக்கு லட்சங்களில் சம்பளம் உள்ள நிலையில் படத்திற்கு பூஜை போட்டதுமே கோடிக்கு மேல் சம்பாதித்து சாதனை படைத்தார் டி.ராஜேந்தர். இசைஞானி இளையராஜா கொடி கட்டிப் பறந்த காலத்திலும் இவர் இசை அமைத்த அத்தனைப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாயின. கேசட் விற்பனையையும் எகிற வைத்தது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என எல்லாப் பொறுப்புகளையும் திறம்பட கவனித்து படத்தில் நடித்து சொந்தமாக தயாரிக்கவும் செய்தார் டி.ஆர்.

இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சர்வ சாதாரணமாக 100 நாள்களைக் கடந்தது. இவரைத் தமிழ்சினிமாவின் அஷ்டாவதானி என்றே சொல்லலாம். இவர் சொந்தமாகப் படம் எடுத்தாலும் ஒரு கொள்கைப்பிடிப்போடு தான் இருந்தார்.

அதாவது தான் எடுக்கும் படங்களின் தலைப்புகள் நவரசம் ததும்பும் வகையில் 9 எழுத்துகளில் தான் இருக்க வேண்டும் என்று எடுத்தார். பாடல் காட்சியில் கூட எந்தப் பெண்ணையும் தொட்டு நடிக்காத ஒரு உன்னத நடிகர். அம்மாவாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும் கூட இந்தத் தொடுதல் அவரது படத்தில் இருக்காது.

ஆனால் இவரது படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இவர் குத்தாட்டம் போட்டால் திரை அரங்கமே அதிரும். படத்தில் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் சற்றும் மனம் தளராதவர். ஒரு கால கட்டத்தில் தமிழகத்தின் அழகு தேவதை என அனைவராலும் அறியப்பட்ட அமலாவை அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.

ஆனந்த்பாபு, ராஜூ, தியாகராஜன், தியாகு, நளினி, பப்லு, ரேணுகா, மும்தாஜ் என பட்டியல் நீளும். தமிழ்சினிமாவில் செட் போடுவதில் இவர் தான் கிங்;. சந்திரலேகா படத்திற்குப் பின் இவரது படங்களின் செட் தான் பரபரப்பாகப் பேசப்பட்டது.

பெரும் செலவில் படம் எடுத்தாலும் இதுவரை எந்த பைனான்சியரிடமும் கடன் வாங்கியது இல்லை. இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர். இவர் திரைக்கு வரும்போது மதுரைக்காரர்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்தனர். மாயவரத்தில் இருந்து வந்த இவர் நிறைய அவமானங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்தார்.

En thangai kalyani

80களில் பாக்யராஜ் தாய்க்குலங்களை எப்படி கவர்ந்தாரோ அதே மேஜிக் அப்போது டி.ஆருக்கும் தெரிந்திருந்தது. ஒரு தலை ராகத்தில் ஆரம்பத்த இவரது வெற்றிப்பயணம் என் தங்கை கல்யாணியோடு முடிவடைந்தது.

அரசியல், சினிமா என பன்முகத்திறன் கொண்டு ஒரே நேரத்தில் பயணித்தார். எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த நேரத்தில் அவரை எதிர்த்து திமுகவில் இணைந்தார்.

எம்ஜிஆருக்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்து திமுக தொண்டர்களிடம் தனி செல்வாக்குப் பெற்றார். இவரது ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தான். அதுவே அவருக்கு தோல்வியைத் தழுவவும் செய்தது.

1988ல் என் தங்கை கல்யாணி வெள்ளிவிழா கொண்டாடியது. இந்தப்படத்தில் இவரது மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம் படங்கள் சக்கை போடு போட்டன.

TR

1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் சீட் பேரத்தில் கலைஞருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் திமுகவை விட்டு வெளியேறினார். அதே ஆண்டு வெளியான சம்சார சங்கீதம் படம் படு தோல்வியைச் சந்தித்தது.

அன்று முதல் டிஆருக்கு தோல்வி தான். தொடர்ந்து சாந்தி எனது சாந்தி, சொன்னால் தான் காதலா, மோனிஷா என் மோனாலிசா என ஆரம்பித்து கடைசியில் வீராசாமி வரை தொடர்கிறது. இவருக்கு திரை உலகில் வசந்தகாலம் எது என்றால் 80-89வரை எனலாம்.

இவர் பிசியாக இருந்தபோது கிளிஞ்சல்கள், பூக்களைப் பறிக்காதீர்கள், கூலிக்காரன், பூப்பூவா பூத்திருக்கு போன்ற படங்களுக்கும் பாடல் எழுதி இசை அமைத்துக் கொடுத்தார். இந்தப்பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாயின.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment