Cinema News
கமல்ஹாசன் கண்டபடி திட்டியதால் கடுப்பான சேரன்… கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா??
இயக்குனர் சேரன் தொடக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அப்போது சேரனுக்கு கமல்ஹாசன் திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்ததாம்.
அவர் நினைத்தபடியே தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மூலம் “மகாநதி” திரைப்படத்தில் சந்தான பாரதியிடம் உதவியாளராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது ஒரு நாள் கமல்ஹாசன் திடீரென ஜலதரங்கம் என்ற வாத்திய கருவி வேண்டும் என கேட்டாராம்.
ஆனால் சேரனுக்கோ ஜலதரங்கம் என்றால் என்ன என்றே தெரியாதாம். அது ஒரு இசைக்கருவி என்று தெரியவந்தவுடன் சென்னை மைலாப்பூரில் ஒருவர் அதனை வைத்திருக்கிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. அதன் பின் அவரது வீட்டை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, அவரிடம் ஜலதரங்கத்தை ஷூட்டிங்கிற்காக கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் மறுத்துவிட, அவரை ஒரு வழியாக பேசி சமாளித்து, ஜலதரங்கத்தோடு அவரையும் கூட்டிக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தாராம். ஆனால் அன்று அந்த காட்சியை படமாக்க முடியவில்லையாம். “என்ன இது? ஜலதரங்கம் வேண்டும் என்று முதலிலேயே கூறியிருந்தால் அதனை தயார் செய்து வைத்திருக்கலாம். இவர் ஏன் இப்போது வந்து வேண்டும் என சொல்கிறார்” என்று சேரன் கோபமடைந்தாராம்.
அதன் பின் இன்னொரு நாள் மற்றொரு காட்சியை படமாக்கும்போது மழை வந்துவிட்டதாம். அனைவரும் ஒரு ஓரத்தில் ஒதுங்கியிருக்க, திடீரென வானத்தில் வானவில் தெரிய தொடங்கிவிட்டதாம். உடனே கமல்ஹாசன், “சீக்கரம் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க, கேமரா கொண்டுவாங்க, வானவில்லோட சேர்ந்து இந்த காட்சியை படமாக்கினால் நன்றாக இருக்கும்” என கூறியிருக்கிறார்.
ஆனால் கேமரா யூனிட்டில் இருந்தவர்கள் மழை பெய்கிறது என்று கேமராவை ஒரு வண்டிக்குள் வைத்து தூரத்தில் எடுத்துக்கொண்டுப் போய் விட்டார்களாம். சேரனுடன் சேர்ந்து சக உதவியாளர்கள் சிலரும் வெகு தூரம் ஓடிச்சென்று கேமரா யூனிட்டிடம் சொல்ல அவர்கள் மழை பெய்வதனால் வர மறுத்திருக்கிறார்கள்.
அதன் பின் அவர்களை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, கேமராவை கொண்டு வருவதற்குள் வானவில் காணாமல் போயிருக்கிறது. உடனே கமல்ஹாசன் கண்டபடி திட்டினாராம். இதனால் கோபமடைந்த அசோசியேட் டைரக்டர் ஒருவர் நான் இந்த படத்துலயே வேலை பார்க்கலை என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம். அசோசியேட் டைரக்டரே கிளம்பிவிட்டார், இனி நாம் இருந்து என்ன பண்ண என்று நினைத்த சேரனும் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சேரன், “அன்று நான் கோபத்தில் வெளியேறிவிட்டேன். ஆனால் அது எனக்கு ஏற்பட்ட அறியாமை என்று பின்னாளில்தான் எனக்கு தெரிந்தது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.