Cinema History
இனி அந்த பாடலை பாடமாட்டேன்-மகன் இறந்த துக்கத்தில் டி.எம்.எஸ் எடுத்த திடீர் முடிவு…
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகர்களில் ஒருவரான டி.எம்.சௌந்தரராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற பல டாப் நடிகர்களின் திரைப்படங்களில் பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். தற்போது டி.எம்.சௌந்தரராஜனை கொண்டாடும் வகையில் அவரது 100 ஆவது பிறந்த நாளில் அவரை பற்றிய நினைவுகளை பலரும் அசைப்போட்டு வருகின்றனர்.
துக்கத்தில் டி.எம்.எஸ் எடுத்த முடிவு
இந்த நிலையில் டி.எம்.சௌந்தரராஜனின் மகன் இறந்தபோது அவருக்கு ஏற்பட்ட துக்கமும் அதனால் அவர் எடுத்த முடிவை குறித்தும் ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த 1959 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “பாகப்பிரிவினை”. இத்திரைப்படத்தை ஏ.பீம்சிங் இயக்கியிருந்தார். விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் இத்திரைப்படத்தின் பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பிரபலமான பாடல் என்றாலும் கண்ணதாசன வரிகளில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய “ஏன் பிறந்தாய் மகனே” என்ற பாடல் காலத்தை தாண்டியும் ரசிக்கப்பட்டு வருகிறது.
“ஏன் பிறந்தாய் மகனே” பாடலின் ரெக்கார்டிங்கின்போது டி.எம்.எஸ்-ன் 16 வயது மகன் உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம். மிகக் கடுமையான காய்ச்சலால் உயிர்போகும் நிலையில் படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். ஆனாலும் ரெக்கார்டிங்கிற்கு செல்லவேண்டிய சூழல். தனது உதவியாளரிடம் மகனை கவனித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கனத்த இதயத்துடன் ரெக்கார்டிங்கிற்கு சென்றுள்ளார்.
அங்கே “ஏன் பிறந்தாய் மகனே” பாடலை ரெக்கார்டு செய்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவரது மகன் இறந்துவிட்டிருக்கிறார். தனது மகனை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு வர பல நாட்கள் ஆகியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எந்த கச்சேரிகளிலும் “ஏன் பிறந்தாய் மகனே” பாடலை பாடக்கூடாது என முடிவெடுத்தாராம் டி.எம்.எஸ். அந்த பாடலை பாடும்போதெல்லாம் தனது மகனின் ஞாபகம் வருவதால் அப்படி ஒரு முடிவை எடுத்தாராம்.
துக்கத்தை தளர்த்தி பாடிய டி.எம்.எஸ்.
எனினும் அந்த சம்பவம் நடத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை தமிழ் சங்கத்தின் விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார் டி.எம்.எஸ். அப்போது அந்த சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர், “எனது வயதான தாய் மிகவும் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் உங்களது தீவிர ரசிகை. நீங்கள் எனது தாயை ஒரு முறையாவது வந்து பார்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தாராம்.
அந்த வேண்டுகோளுக்கு இணங்க அவரது தாயை சென்று பார்த்திருக்கிறார் டி.எம்.எஸ். அப்போது அந்த தாய், “எனக்கு ஒரே ஒரு ஆசை. அந்த ஏன் பிறந்தாய் மகனே பாடலை எனக்காக ஒரு முறை பாட வேண்டும்” என கேட்டிருக்கிறார். அப்போது அந்த முதிய உடல் நலம் குன்றிய தாயிற்காக தனது முடிவை தளர்த்தி அந்த பாடலை பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். அந்த தமிழ் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் கவிஞர் வாலியின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் அடித்த பல்டி… ரத்தக்களரியில் நடிகர் சூரி… ஒரு படத்துக்காக இவ்வளவு கஷ்டப்படுறதா?