Connect with us

Cinema News

நடிகரின் கோபத்தை பார்த்து பயந்த சாவித்திரி!.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்.. இப்படிப்பட்டவரா அவர்?!..

பழம் பெரும் தமிழ்ப்பட இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவ் பற்றி ஒரு சுவையான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

ACT

நானும் ஒரு பெண் படத்தின் தெலுங்கு ரீமேக் சூட்டிங் நடந்தது. படத்தின் பெயர் நாடி ஆட ஜன்மே. அதில் ஒரு சோகமான சீன். ஆனால் வேடிக்கையான நிகழ்ச்சி நடந்தது.

கருப்பான ஏழைப் பெண் கல்யாணி. அவள் மீது அபாண்டமான பழி சுமத்தப்பட்டு வேதனையில் துடிக்கிறாள். அவளுக்கு இருந்த ஒரே பிடிமானம் அவளது கணவர்தான். அவனது அன்பு கூட அளந்து தரப்பட்டது போலத்தான் இருந்தது. அன்று தனக்கு படிக்கவும் தெரியாது என்ற குற்றச்சாட்டும் வரப்போகிறதே என்று பயந்து நடுங்கினாள்.

அன்று கையிலே தட்டுடன் வருகிறாள். சப்பாத்தி, வெஜிடபிள் குருமா, தோசை, வடை, சாம்பார் என புருஷனுக்கு இரவு டிபன் கொண்டு வந்திருந்தாள். அவனோ அன்று கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். அவர் தான் என்டி.ராமராவ். இயல்பாகவே எளிதில் உணர்ச்சிவசப்படுபவர். அந்தக் காட்சி வேறு அவருக்கு அல்வா சாப்பிட்டது போல இருந்தது.

அந்தக் காட்சிப்படி கையில் இருக்கும் தட்டைத் தட்டி விட வேண்டும். அதன்பின் உணர்ச்சிகரமான டயலாக்குகள் பேச வேண்டும். சாவித்திரி என்னிடம் வந்து, நான் தட்டைக் கீழே வைத்து விட்டு வசனம் பேசலாமா என்றார். ஏன் பயமாக இருக்கிறதா? என்று கேட்டேன்.

அவர் எவ்வளவு கோபமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர் கோபமாகத் தட்டைத் தட்டி விட்டால் அது தலையில்தான் வந்து விழும். அபிஷேகம் நடக்கும். அப்புறம் எப்படி உணர்ச்சிகரமான டயலாக்குகளைப் பேசுவது என்று கேட்டார்.

நான் அவருக்கு எடுத்துச் சொல்கிறேன் என்றேன். பின்னர் சாவித்திரியிடம் தட்டைக் கொண்டு வரச் செய்தேன். எப்படித் தட்டைத் தட்டி விட்டால் உங்கள் மீது எதுவும் படாது என்று நான் சொல்லிக் காட்டினேன். என்னைப் பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்தார் சாவித்திரி.

தட்டை எடுத்துக் கொண்டார். கேமரா ஆன் செய்யப்பட்டது. அது ஒரே ஷாட்டாக இருந்தால் நன்றாக இருக்கும். வசனம் பேசி முடிந்தது. தட்டைத் தட்டி விட வேண்டியதுதான் பாக்கி. அதற்கான நேரமும் வந்தது. ராமாராவ் தட்டைத் தட்டினார். தட்டுப் பறந்தது.

ஆனால் நான் சொன்னபடி அவர் செய்யவில்லை. அவர் பாணியிலேயே சாவித்திரி சொன்னபடி நடித்தார். சப்பாத்தி, குருமா, சாம்பார், தோசை, குழம்பு எல்லாம் வானத்தில் பறந்தது. மேலிருந்து இறங்கிய அவை எல்லாம் அவரது தலையிலேயே அபிஷேகமாகக் கொட்டியது. குருமா தலையில் வழிந்து கண் வழியாக மூக்கைத் தொட்டது. சப்பாத்தி தொப்பியாக அவர் தலையில் வந்து விழுந்தது. காரம் பட்டு கண்களை இறுக மூடிக்கொண்டார்.

என்றாலும் மனுஷன் விடாமல் வசனம்பேசினார். முதலில் என்னைத் திரும்பிப் பார்த்து நான் சொன்னது அப்படியே நடந்தா இல்லையா என கேட்கும் தோணையில் பார்த்து சாவித்திரி சிரித்தார்.

அதே நேரம் இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் நான் கட் சொல்லவும் மறந்து போனேன். படப்பிடிப்பும் தொடர்ந்தது. ராமாராவ் மட்டும் நடித்துக்கொண்டே இருந்தார். அப்பேர்ப்பட்ட உணர்ச்சிமயமான மனிதர் தான் அவர். எந்தப் பிரச்சனைகளுக்கு நடுவிலும் கடமை, கொள்கை மறக்காமல் செயல்படுவார்.

Continue Reading

More in Cinema News

To Top