மஞ்சுமல் பாய்ஸ் மலையாளப்படம் தமிழ்த்திரை உலக ரசிகர்களையே கொண்டாடச் செய்து வருகிறது. அப்படி என்றால் அதில் என்ன விசேஷம் உள்ளது என்பதை பிரபல திரை விமர்சகரும், ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
ரூ.20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட படம். ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து வருகிறது. 50 தியேட்டரில் போடப்பட்ட படம் 250 தியேட்டர்களில் அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் கதை இதுதான்.
மஞ்சுமல்லில் இருந்து பசங்க குணா குகையைப் பார்க்க வர்றாங்க. அதில ஒருத்தர் மாட்டிக்கிடுறார். அவரை எப்படி மீட்டு எடுக்கிறாங்களா இல்ல இறந்துவிடுறாரா என்பது தான் கதை. ஓடிடி தளத்திலும் இந்தப் படம் பார்க்க போட்டி போடுறாங்க. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் படத்தைப் பார்க்க ஆசைப்படறாங்க. இந்தப் படத்திற்குப் பிறகு கமல் நடித்த குணா படமும் பேசப்படுகிறது. கமல் சந்தித்து அவர்களைப் பாராட்டுறாரு.
இந்தப் படம் அப்படி என்ன செய்தது என்றால் இது உண்மைக்கு நெருக்கமான கதையை பண்ணிருக்கு. கதை பஞ்சத்துல முதலில் பாலிவுட் சினிமா காலியானது. அப்புறம் தெலுங்கு படங்கள் ரீமேக் ஆனது. அதே போன்ற படங்கள் ஓடும் என தமிழிலும் எடுக்க ரசிகர்களுக்கு சினிமா போரடித்துவிட்டது.
ரஜினி, கமல் படங்கள் கூட கதை தேர்வு சரியில்லாமல் உள்ளது. விஜய், அஜீத் படங்களுக்குப் போட்டியாகப் பண்றோம்கற இடத்தில் ரஜினி, கமலும் வந்து சேர்ந்துட்டாங்க.

ஏவிஎம் மாதிரி பாரம்பரியமாக சினிமா தயாரிச்ச நிறுவனங்களே இப்போது வேண்டாம் என ஒதுங்குகின்றன. அந்த மாதிரி தான் கதைகளங்கள் தமிழ்சினிமாவை ஆக்கிரமித்துள்ளன. மலையாள சினிமாவில் கதாசிரியர்கள் மக்களோடு மக்களாக யதார்த்தமாகக் கலந்து வாழ்வதால் அங்கு கதைக்கு பஞ்சமில்லாமல் தரமானதாக வருகிறது. அங்கு கதாசிரியர் தனி. இயக்குனர் தனி. அதே போல அங்கு மோகன்லாலும், மம்முட்டியும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதை வந்தால் நடிக்கத் தயங்குவதில்லை.
ரசிகர்களின் மனநிலை தான் சினிமாவின் தரத்தை நிர்ணயிக்கிறது. எல்லோரது கையிலும் சமூக ஊடகங்கள் இருப்பதால் அவர் எளிதில் தர நிர்ணயம் செய்து விடுகிறான். அதனால் அவர்களுக்கு உண்மைக்கு நெருக்கமான படத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதைப் பூர்த்தி செய்துள்ளது இந்த மஞ்சுமல் பாய்ஸ்.
முதலில் நல்ல கதாசிரியரைக் கண்டறிந்து அவர்களைப் பயன்படுத்த வேண்டும். இயக்குனர்கள் தங்களது சொந்த அறிவைப் பயன்படுத்த வேண்டும். பல இளம் இயக்குனர்கள் வித்தியாசமான கதையுடன் இருக்கிறார்கள். அவர்களை இப்போது முன்னணியில் உள்ள ஹீரோக்கள் வரவேற்க வேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா தப்பிப் பிழைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
