கள்ளக்குறிச்சி தர்ணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்திருக்கிறார்கள். 10 பேர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் கணவரையும், குழந்தைகள் பெற்றோரையும் இழந்திருக்கிறார்கள். இந்த சோகம் தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது முழுக்க முழுக்க அரசியல் அலட்சியம் எனவும் காவல்துறை இதை தடுக்கவில்லை எனவும் சமூகவலைத்தளங்களில் பலரும் பொங்கி வருகிறார்கள், திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் விஷால் மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் தமிழக அரசை கண்டித்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
Also Read
இதையும் படிங்க: என்னது… மகாராஜா படம் விஜய் சேதுபதிக்காக எழுதலயா…? டைரக்டரே இப்படி சொல்லிட்டாரே..!
இந்நிலையில், சமூகம் தொடர்பாக அவ்வபோது பேசி வரும் சூர்யா தனது டிவிட்டரில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ‘ஒரு சிறிய ஊரில் 50 பேர் மரணடைந்திருப்பது புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம். விஷச்சாரயத்திற்கு குடும்பத்தினரை பலி கொடுத்துவிட்டு நிற்பவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?..
நீண்ட கால பிரச்சனைக்கு அரசின் குறுகிய கால தீர்வு நிச்சயம் பலனளிக்காது. போன வரும் விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இப்போது அருகில் உள்ள மாவட்டத்தில் 50 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள். எந்த மாற்றமும் நிகழவில்லை.

கடந்த 20 வருடங்களாக அரசே மாறி மாறி டாஸ்மாக் கடைகளை நடத்தி மக்களை குடிக்க வைக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மதுவிலக்கு கொள்கை என்பது எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் நேர பேசுபொருளாக மட்டுமே முடிந்துவிடுகிறது.

டாஸ்மாக்கில் 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள்தான் பணம் இல்லாதபோது 50 ரூபாய்க்கு சாராயத்தை வாங்கி குடிக்கிறார்கள். டாஸ்மாக் என்கிற பெயரில் அரசாங்களே பல வருடங்களாக மக்களின் மீது வன்முறையை நிகழ்த்தி வருகிறது. அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு இதுபோன்ற அவலங்களை தடுக்க வேண்டும். சட்டவிரோத விஷச்சாராயத்தை தடுக்க தவறியை ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம். இறந்து உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டும் வர பிரார்த்தனை’ என அதில் பதிவிட்டிருக்கிறார்.



