Ilaiyaraja, Yesudoss
Ilaiyaraja, Yesudoss

80ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் தெரியும். தமிழ்சினிமாவில் இசையுலகில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தியவர் யார் என்று கேட்டால் சட்டென்று இசைஞானி இளையராஜாவைச் சொல்வார்கள். அந்த வகையில் அவர் இசையில் ஏராளமான பாடல்கள் இன்றும் இசைப்பிரியர்களின் மனதில் லயித்துக் கொண்டே இருக்கின்றன.

யேசுதாஸ் என்றாலே அது காந்தக் குரல் தான். இளையராஜாவுக்கு வசீகரிக்கும் மந்திரக் குரல். அதனால் தான் இருவரது பாடல்களிலும் ஒரு ஈர்ப்பு வருகிறது.

அப்படி ஒரு பாடலுக்கு இளையராஜா யேசுதாஸை அழைத்துள்ளார். எல்லாரும் ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார்கள். இசைக்கலைஞர்கள் எல்லாம் ரெக்கார்டிங்குக்குத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் யேசுதாஸ் மட்டும் வரவில்லை.

இளையராஜா அந்த நேரத்திற்குள் அந்தப் பாடலை பாடி ரெக்கார்டிங் செய்து பார்த்தார். பாடல் நன்றாக வந்து இருந்தது. நீண்ட நேரம் ஆனது. ஆனால் யேசுதாஸ் போன் போட்டார். தவிர்க்க இயலாத காரணத்தால் தன்னால் வர முடியவில்லை என்று சொன்னார்.

Thai Moohakmbigai
Thai Moohakmbigai

இளையராஜாவும் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘நாளை ரெக்கார்டிங்கை வைத்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி விட்டார். மறுநாள் ஸ்டூடியோவுக்கு யேசுதாஸ் வந்தார். இளையராஜா பாடிய பாடலைக் கேட்டுப் பார்த்தார். அவரது கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வந்தது.

‘இந்தப் பாடலை என்னால் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாட முடியாது. நீங்களே பாடுங்கள். அது தான் மக்கள் மனதிலும் என்றென்றும் நிலைத்து நிற்கும்’ என்றார்.

அதன்பிறகு இளையராஜா எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தார். ஆனால் கடைசி வரை அவர் மறுத்து விட்டார். அதன்பிறகு தன் சொந்தக்குரலில் இளையராஜா பாடினார்.

அந்தப் பாடல் எது என்று தானே கேட்கிறீர்கள். ‘ஜனனீ, ஜனனீ, ஜகம் நீ அகம் நீ’ என்ற பாடல் தான் அது. இந்த அற்புதமான பாடல் ‘தாய் மூகாம்பிகை’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றும் இளையராஜா தனது இசைக்கச்சேரிகளில் முதலாவதாகப் பாடும் பாடல் இதுதான்.