இந்த படத்தில் எனக்கு வேலையே இல்ல!.. கமல் படத்தில் இசையமைக்க மறுத்த இளையராஜா!…

Published on: November 7, 2024
---Advertisement---

Ilayaraja kamal: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தில் இடம் பெற்ற ‘மச்சான பாத்தீங்களா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இளையராஜாவின் மண் வாசனை மிக்க இசையில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். மிகவும் எளிய, மனதை மயக்கும் இனிமையான இசையே இளையராஜா ரசிகர்களிடையே ரீச் ஆனதற்கு முக்கிய காரணம்.

80களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிக்காக இளையராஜாவை நம்பி இருந்தது. கதை, ஹீரோ, இயக்குனர் என எல்லாம் சேர்த்து 50 சதவீதம் எனில் மீதமுள்ள 50 சதவீத நம்பிக்கை இளையராஜாவாக இருந்தது. அவரின் இசையமைக்க சம்மதம் சொல்லிவிட்டால் படம் ஹிட் என்கிற நிலைதான் அப்போது இருந்தது.

அதனால்தான் ரஜினி, கமல் போன்ற பெரிய ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் இளையராஜா மட்டுமே இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால், சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என பார்க்கவே மாட்டார் இளையராஜா. ஒரு படத்திற்கு இசையமைக்க சம்மதித்துவிட்டால் இனிமையான பாடல்களை கொடுத்துவிடுவார்.

ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், பிரபு, ராமராஜன், சத்தியராஜ், அறிமுக ஹீரோ என எல்லாமே அவருக்கு ஒன்றுதான். பல மொக்கை படங்களையும் தன்னுடைய இசையால் ஓட வைத்தவர் இளையராஜா. இன்றெல்லாம் ஒரு பாடலுக்கு ஒரு மாதம் எடுத்துக்கொள்ளும் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், இளையராஜா ஒரு படத்திற்கு இசையமைக்க அரை மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்வார். நடிகர்களில் இளையராஜாவுடன் நெருங்கி பழகியவர் கமல்ஹாசன் என சொல்லலாம். கமல் விருமாண்டி படம் எடுத்தபோது இளையராஜாவிடம் சென்று இந்த படத்தில் நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என கதையை சொல்லி இருக்கிறார். அவர் சொன்னது எல்லாமே வன்முறை காட்சிகள்.

இதைக்கேட்ட இளையராஜா ‘இந்த படத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது?. ஒரே சண்டை காட்சிகளாக இருக்கிறது. என்னால் இசையமைக்க முடியாது’ என சொல்லிவிட்டாராம். கமல் அலுவலகம் சென்று தனது உதவியாளர்களிடம் இதை சொல்ல ‘நீங்கள் அவரிடம் சண்டை காட்சிகளை மட்டும் சொல்லி இருக்கிறீர்கள். மற்ற நல்ல காட்சிகளை சொல்லுங்கள்’ என சொல்ல, கமல் மீண்டும் வந்து இளையராஜாவிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

‘விருமாண்டி என பெயர் வைத்துவிட்டு இப்படி ஒரு பாடல் இல்லாமலா’ என சொல்லி ‘உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல’ என பாடியிருக்கிறார் ராஜா. டியூனை கேட்டு நெகிழ்ந்து போன கமல் ‘இந்த பாடலுக்கு படத்தில் காட்சி இல்லை. ஆனால், நான் காட்சியை உருவாக்கி இந்த பாடலை வைக்கிறேன்’ என சொல்லிவிட்டு போனாராம். இந்த தகவலை இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment