லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த 2019ம் வருடம் வெளியான திரைப்படம்தான் கைதி. லோகேஷ் கனகராஜை மாநகரம் படத்தின் மூலம் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை தயாரித்திருந்தார். ஒரே இரவில் நடக்கும் கதைக்கு பரபர ஆக்சன் திரில்லர் திரைக்கதை அமைத்து அசத்தலாக இயக்கியிருந்தார் லோகேஷ்.
இந்த படம்தான் அவருக்கு ரசிகர்களை பெற்று கொடுத்தது. கார்த்தி, நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளியது. படம் முடியும்போது இரண்டாம் பாகம் துவங்குவதுபோல காட்சியை முடித்திருந்தார் லோகேஷ். எனவே இந்த படத்தின் இரண்டாம் பகுதி எப்போது வரும் என ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஆனால் 6 வருடங்கள் ஆகியும் அதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து விஜய், கமல், ரஜினி என பயணிக்க துவங்கி விட்டார்.
கைதி 2-வை துவங்கலாம் என எஸ்.ஆர் பிரபு பலமுறை கேட்டும் லோகேஷ் பிடி கொடுக்கவில்லை. ஒருபக்கம் லியோ,கூலி படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் கண்டிப்பாக லோகேஷின் அடுத்த படம் கைதி-2 வாக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ ஆந்திரா சினிமா பக்கம் போய் அல்லு அர்ஜுனுக்கு கதை சொன்னார். ஒருபக்கம் பாலிவுட் நடிகர் அமீர்கானிடமும் அவர் பேசி வருகிறார். எனவே அடுத்து இவர்களில் யாராவது ஒருவரை வைத்து அவர் படம் இயக்குவார் என தெரிகிறது.
கைதி 2-வுக்காக கார்த்தியும் ஆலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் லோகேஷிடமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் ‘வா வாத்தியார்’ படத்தின் புரமோஷன் விழாவில் ‘கைதி 2 எப்போது வரும்?’ என்கிற கேள்விக்கு ‘அந்த படத்தை பற்றி என்ன அப்டேட் என்று எனக்கே தெரியாது’ என்று பதில் சொல்லியிருக்கிறார் கார்த்தி. இதை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘மனுஷன் நொந்து போயிட்டாரு’ என பதிவிட்டு வருகிறார்கள்.
