அரசியலுக்கு வரும் எல்லாமே பொதுவாக சொல்வது ‘நான் ஊழலை ஒழிப்பேன்’ என்பதுதான். ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை என்பதே நிஜம். ஊழலை கட்டுப்படுத்தலாம்.. ஆனால், அறவே ஒழிக்க மக்களின் மனநிலையும் மாறவேண்டும். அதுவும் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் போது பலரும் அதை ஏற்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு டிக்கெட் 2 ஆயிரம், 3 ஆயிரம் வரை விற்கும்போது அதே நடிகர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள்.

அந்த வகையில் அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர் விஜயும் இன்று நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது‘அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமும் சரி.. அதிகாரத்திற்கு வந்ததற்கு அப்புறமும் சரி.. இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ.. இப்ப இருக்கறவங்க மாதிரியோ.. நான் ஊழல் செய்ய மாட்டேன்.. ஒரு பைசா தொடமாட்டேன்.. எனக்கு அது அவசியமும் இல்லை.. ஒரு துளி கூட கரை படியவே படியாது’ என்று பேசியிருக்கிறார்.

இந்த செய்தியை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரபல youtube சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ‘ஊழலை நேரடியாக செய்யாவிட்டாலும் அதை வேடிக்கை பார்த்து அமைதியாக இருப்பதும் ஊழல்தான்.. இத்தனை ஆண்டுகளில் ஒரு முறையாவது எனது ரசிகர்கள் பிளாக்கில் டிக்கெட் வாங்குவோ விற்கவோ கூடாது என சொல்லி இருக்கிறாரா விஜய்?.. ஜனநாயகன் வரும்போது இதை சொல்ல தைரியம் இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

புளூசட்டை மாறன் திமுகவுக்கு ஆதரவாளர் என்பதால் விஜயை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.. இந்த பதிவுக்கு ‘ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் படங்களை கடுமையாக விமர்சிக்கும் தைரியம் உனக்கு இருக்கா?’ என்று விஜய் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.