velpari

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறினார். பாலிவுட், டோலிவுட் நடிகர்கள் கூட ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். மணிரத்தினத்திற்கு பின் ஐஸ்வர்யா நடிக்க ஒப்புக்கொண்டது ஷங்கரின் இயக்கத்தில்தான்.

அதேநேரம் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஷங்கர் கடந்த சில வருடங்களாக கொடுத்த தொடர் தோல்விகளால் பின்னுக்கு தள்ளப்பட்டார். அவர் இயக்கி வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. அதோடு, தயாரிப்பாளருக்கும் பல கோடி நஷ்டம். கேம் சேஞ்சர் படம் வெளியாகி சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனாலும் ஷங்கரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

ஒருபக்கம், வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டார் ஷங்கர். ஆனால் பட்ஜெட் அதிகம் என்பதால் அவருக்கு தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. எனவே மும்பை பக்கம் சென்று தயாரிப்பாளரை தேடி வந்தார். இறுதியில், பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் பென்மீடியா ஸ்டுடியோஸ் நிறுவனம் ஷங்கரின் வேள்பாரியை தயாரிக்க முன்வந்திருக்கிறது.

அதேநேரம், எவ்வளவு நாள் ஷூட்டிங், எவ்வளவு பட்ஜெட் என்பதை தெளிவாக சொன்னால் மட்டுமே தயாரிப்போம் என சொல்லிவிட்டதால் தற்போது அதற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கியிருக்கிறார். ஒருபக்கம் இந்த படத்தில் நடிக்க சியான் விக்ரம் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரை டிக் அடித்திருக்கிறாராம் ஷங்கர். ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் சீயான் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தாலும். ரன்வீர் சிங் ஹிந்தியில் பல சரித்திரக் கதைகளில் நடித்திருந்தாலும் அவர்கள் இருவரையும் ஷங்கர் தேர்ந்தெடுப்பதாக தெரிகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.