நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இதுவரை செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை.. அரசியல் தொடர்பாக எந்த போட்டியும் கொடுக்கவில்லை.. இந்நிலையில்தான் ndtv நிறுவனம் சார்பாக சில பத்திரிகையாளர்கள் விஜயை சந்தித்து 44 நிமிடங்கள் அவரிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.. அதில் அவர் பேசியதாவது:
33 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.. அரசியலுக்கு வர வேண்டும் என்பது எப்போதோ நான் எடுத்த முடிவு. குறிப்பாக, கொரோனா காலத்திற்குப் பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன். கரூரில் அப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.. நடந்ததை புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்திக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை என் அரசியல் முன்மாதிரியாக பார்க்கிறேன். தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்தேன்.. அரசியலில் நீண்ட காலம் பயணிப்பேன். நான் மௌனமாக இருப்பதாலேயே பேசவில்லை என அர்த்தமல்ல.. நான் எனது உரைகள் மூலம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். என் கருத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.. அரசியல்தான் என் எதிர்காலம்.
நான் அரசியலுக்கு வந்ததால் எனது சினிமா வாழ்க்கை பாதித்திருக்கிறது.. ஜனநாயகன் படம் வெளியாகாமல் இருப்பது எனக்கு வருத்தம்தான். எனது அரசியல் வாழ்க்கையால் தயாரிப்பாளர் பாதித்திருப்பது எனக்கு கவலையாக இருக்கிறது.. ஆனால் இதை நான் எதிர்பார்த்தேன்.. மனதளவில் அதற்கு நான் தயாராக இருந்தேன்..
கேள்விகளை எதிர்கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை.. இப்போது நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் நேரடியாக பதில் சொல்லியிருக்கிறேன். நான் இடதுசாரியும் அல்ல.. வலது சாரியும் அல்ல.. மத்தியிலும் இல்லை.. என்னைப் பொறுத்தவரையில் மக்களின் பிரச்சினையை பேசுவதுதான் அரசியல்.. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.



