
80களில் தமிழ் சினிமாவில் கலக்கியவர் இளையராஜா. 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கிய இளையராஜா 1990வரை முக்கிய இசையமைப்பாளராக இருந்தார். படம் ஓடவேண்டுமென்றால் இளையராஜாவை விட்டால் வேறு யாருமே இல்லை என்கிற நிலையும் அப்போது இருந்தது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற புதிய இசையமைப்பாளர்கள் வந்ததால் இளையராஜா இசையமைக்கும் படங்கள் எண்ணிக்கை குறைந்தது..
அதேநேரம் இளையராஜாவின் பாடல்களுக்கென என ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் எப்போதும் இருக்கிறது. தற்போது சினிமாவில் இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார் இளையராஜா. ஒருபக்கம் தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் திரைப்படங்களில் யாரேனும் பயன்படுத்தினால் காப்புரிமை அடிப்படையில் வழக்கு தொடர்ந்து வருகிறார் இளையராஜா. பல திரைப்படங்களும் இப்படி வழக்கை சந்தித்திருக்கின்றன..
இதனால் ரசிகர்களே இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களை அவரே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இளையராஜா மற்றும் சரிகம நிறுவனங்களுக்கு இடையே காப்பரிமை தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் சரிகம நிறுவனம் உரிமை கோரியிருக்கிறது. எனவே அந்த பாடல்களை இளையராஜா பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது.. அந்த பாடல்களை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என திமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது..
வழக்கமாக இளையராஜாதான் தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தகூடாது என நீதிமன்றத்திற்கு போவார். தற்போது அவர் இசையமைத்த பாடல்களை அவரே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.