Cinema History
ஜெயலலிதா கேட்ட கடவுள் பற்றிய கேள்வி… அசத்தலாகப் பதில் சொன்ன எம்ஜிஆர்!
புரட்சித்தலைவர் படங்களில் அனல் பறக்க தத்துவ கருத்துக்கள் புரட்சிகரமாக இருக்கும். அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச் நச்சென்று இருக்கும். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வர். ஆனால் அவரது படங்களில் கடவுள் சம்பந்தமான காட்சி அதிகம் இருக்காது. அவருக்கு கடவுள் பக்தி உண்டா, இல்லையா என்று பார்க்கலாம்.
எம்ஜிஆருடைய தாயாரான சத்யபாமா அம்மையார் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவர். ஒரு பக்கம் காளியை வணங்கினார். இன்னொரு பக்கம் திருமாலை வணங்கினார். எம்ஜிஆருக்கு இஷ்ட தெய்வம் எது? எந்தெந்த தெய்வங்களை எல்லாம் வணங்கினார் என்பது பற்றி பொம்மை பத்திரிகையில் எம்ஜிஆரைப் பேட்டி காண வாய்ப்பு கிடைத்த போது ஜெயலலிதா அவரைப் பார்த்துக் கேட்டார்.
கடவுள் பக்தி உண்டா என்று ஜெயலலிதா கேட்டபோது உண்டு என்று எம்ஜிஆர் பதில் அளித்தார். நீங்கள் கோவிலுக்குப் போவீர்களா என்று கேட்டார் ஜெயலலிதா. அதற்கு எம்ஜிஆர், திருப்பதிக்கு 2 முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்குச் செல்லும்போது எனக்கு 12 அல்லது 13 வயது இருக்கும். அப்போது நான் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டு இருந்தேன்.
2வது தடவை நான் சென்றது மர்மயோகி படம் வெளியானபோது. திருப்பதியைப் பொருத்தவரைக்கும் நான் 2வது முறை போனதுதான் கடைசி. அதற்குப் பிறகு திருப்பதிக்கு நான் போகவில்லை. வேறு கோவில்களுக்கு நான் சென்று இருக்கிறேன். கடவுள் மீது தீராத பக்தி எனக்கு உண்டு. அதனால்தான் கோவிலுக்குப் போகிறேனே தவிர அங்கு போய் சாமிக்கிட்ட எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்டு ஒரு நாளும் நான் பிரார்த்தனை செய்தது இல்லை என பதில் சொல்லி இருக்கிறார்.
