நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்ஜிஆருக்கு பின் மக்களிடம் ஆதரவு பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த் என சொல்லலாம். எம்ஜிஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்களில் விஜயகாந்த் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் வரைக்கும் சென்றார். தமிழ்நாட்டுக்கு அவர் முதலமைச்சராக வாய்ப்பும் இருந்தது. ஆனால், திட்டமிட்டு அவருக்கு எதிராக வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்கள் மற்றும் அவரின் உடல்நிலை காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.
விஜயகாந்துடன் நெருக்கமாக பழகியவரும், தயாரிப்பாளருமான காஜா மொய்தின் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். விஜயகாந்த் சார் அரசியலுக்கு வர நானும் ஒரு முக்கிய காரணம்.. கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக மலேசியா சென்றிருந்தபோது அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்..
அப்போது ‘நீங்கள் அரசியல் கட்சி துவங்குங்கள்’ என சொன்னேன். அதற்கு அவர் ‘நமக்கு இருக்கும் டென்ஷனுக்கு அதெல்லாம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். ‘கண்டிப்பாக உங்களால் முடியும்.. மக்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்’ என்று சொன்னேன். அதன் பின்னர்தான் அவர் அரசியல் கட்சி தொடங்கும் வேலைகளில் இறங்கினார்..
மதுரையில் அப்படி ஒரு பிரமாண்ட மாநாடு நடந்தது.. இப்போது இத்தனை லட்சம் பேர் வந்தார்கள்.. அத்தனை லட்சம் பேர் வந்தார்கள் என சொல்கிறார்கள். ஆனால் அந்த மாநாட்டுக்கு வந்த கூட்டம் எண்ணவே முடியாது.. ஒரு தலைவர் வாழும் போது மதிக்கப்படுவதை விட அவர் இறந்த பிறகு அவருக்காக மக்கள் எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.
அப்படி எம்ஜிஆருக்கு பின் விஜயகாந்த் சாருக்குதான் அதிக கூட்டம் வந்தது.. அவர் மலேசியா வந்தபோது அப்படி ஒரு வரவேற்பை நான் கொடுத்தேன். மலேசிய அரசிடம் அனுமதி வாங்கி இரண்டு சைரன் பைக்குகள் மற்றும் 20 பென்ஸ் காரில் அவரை 60 கிலோ மீட்டர் மரியாதையாக அழைத்து சென்றேன்.. அதைப்பார்த்து விஜயகாந்த்தை மிரண்டு போய்விட்டார்.. அதற்கெல்லாம் அவர் மயங்கும் நபர் இல்லை. ஆனால், நமக்காக இதை செய்தானே என என்னிடம் பாசமாக பழகுவார்’ என காஜா மொய்தீன் கூறியிருக்கிறார்.





