நடிகர் திலகம் சிவாஜியின் தேவர் மகன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து இருந்தவர் தான் காக்கா ராதாகிருஷ்ணன். அவர்தான் நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பதற்கே அழைத்துக் கொண்டு வந்தவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். வாங்க அதைப் பற்றிப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்லக் கேட்போம்.
திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் குடியிருந்தவர்கள் தான் காக்கா ராதாகிருஷ்ணனும், சிவாஜியும். அந்தக் காலகட்டத்தில் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு நாடகம்னா உயிர். நாடகங்களுக்குப் போகும்போது தனியாகப் போக மாட்டார். உடன் சிவாஜியையும் அழைத்துச் செல்வார். நாங்க ரெண்டு பேரும் நாடகத்துக்குப் போனோம்னா ஒருத்தருக்கு ஒருத்தர் கூட பேசிக்க மாட்டோம். நாடகத்தில எப்படி நடிக்கிறாங்கன்னு அவங்களையே உன்னிப்பாகக் கவனிப்போம் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் காக்கா ராதாகிருஷ்ணன்.
தினமும் இதுபோல நாடகத்துக்கு சிவாஜியை அழைத்துச் செல்வதால உன் பையன் கண்ட கண்ட இடத்துக்கு எல்லாம் கூட்டிப்போய் என் பையனைக் கெடுக்குறான்னு கூட சிவாஜியின் அம்மா, எங்க அம்மாக்கிட்ட சண்டை போட்டுருக்காங்க. ஒரு காலகட்டத்துல நான் எப்படியோ முயற்சி பண்ணி எம்.கே.தியாகராஜபாகவதர் நாடகக்கம்பெனில சேர்ந்தேன். என்கூட நீயும் வான்னு அந்த நாடகக்கம்பெனிக்கு சிவாஜியை அழைத்தேன்.
நாடகக்கம்பெனிக்கு வந்தா ஒழுங்கா சாப்பாடு போடுவாங்களா? என்னையும் மேடையில் ஏற்றி நடிக்க வைப்பாங்களான்னு 108 கேள்விகளைக் கேட்டு அதுக்குப் பிறகுதான் என்கூட சிவாஜி நாடகக்கம்பெனிக்கு வந்தார் என்கிறார் காக்கா ராதாகிருஷ்ணன். நாடகக்கம்பெனியில நான் சேர்த்து விட்ட அந்தப் பையன் ஒரு நடிகனாக இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுப்பான்னு நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே காக்கா ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.





