ஒரு மனுஷனுக்குள்ள இவ்ளோ நல்ல விஷயங்களா? அபார ஞாபகசக்தி கொண்ட இவர் தான் ஏவிஎம்மின் தூண்

Uyarntha Ullam
மனிதர்களில் இத்தனை நிறங்களா என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விஷயத்தில் நல்லவர்களாக இருப்பார்கள். இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்களாக இருந்து பேரும் புகழும் பெற்றவர்கள் பலர் உண்டு.

Paayum puli
அந்த வகையில் பழம்பெரும் இயக்குனரான ஏ.சி.திருலோகச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி, கமலை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் இவர்.
பாயும் புலி, தர்மத்தின் தலைவன், நல்லவனுக்கு நல்லவன், பாண்டியன், வேலைக்காரன், குரு சிஷ்யன், அதிசயபிறவி, முரட்டுக்காளை, ஆறிலிருந்து அறுபது வரை, மனிதன் என ரஜினியின் வெற்றிப்படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.

S.P.Muthuraman
அதே போல் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, மோகம் 30 வருஷம், சகலகலா வல்லவன், எனக்குள் ஒருவன், ஆடு புலி ஆட்டம், உயர்ந்த உள்ளம், தூங்காதே தம்பி தூங்காதே, ஜப்பானில் கல்யாண ராமன், பேர் சொல்லும் பிள்ளை ஆகிய கமல் படங்களையும் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன்.
அவரை திருலோகச்சந்தரிடம் அறிமுகப்படுத்தியவர் ஏவிஎம் சரவணன். அந்த இனிய தருணத்தைப் பற்றியும், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களின் மத்தியில் வெற்றிப்பட இயக்குனராக பேசப்பட்ட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பற்றியும் இயக்குனர் திருலோகச்சந்தர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
ஏவிஎம் சரவணன் சார் எஸ்.பி.முத்துராமனை எடிட்டிங் டிபார்ட்மெண்ட்டிலிருந்து கொண்டு வந்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். எஸ்.பி.முத்துராமன் ஒரு ஆனிமுத்து.
அவருடைய தாயாரும், தகப்பனாரும் செட்டிநாட்டிலே பெரியாரின் புரட்சிப் பாசறையிலே மின்னிய இரு வாள்கள். முத்துராமன் இதுவரை ஒரு தவறான வார்த்தை கூடப் பேசி அறியாதவர். சிரித்த முகத்தோடு எதையும் பொறுத்துக் கொள்பவர்.
யாருக்கு என்ன நல்லதோ, கெட்டதோ நடந்தாலும் முன் நின்று தோள்கொடுக்கத் தயங்க மாட்டார். முத்துராமன் இருக்கிறார் என்று நம்பி எதிலும் இறங்கலாம்.

Rajni in Nallavanukku Nallavan
இன்றும் அவர் பேசி முடிக்கும்போது ஒரு திருக்குறள் உதாரணத்திற்காகச் சொல்லப்பட்டிருக்கும். நல்ல உழைப்பாளி. அறிவாளி. இயல்பாகப் பேசிப் பதமாக எந்த பிரச்சனையையும் கையாள்வார். எனக்கு எல்லா வகையிலும் ஒரு பெரும் துணையாக இருந்தார்.
படக்கலைஞன் சகல பிரிவுகளின் நெளிவு, சுளிவுகளையும் தன் நகமுனையில் வைத்திருப்பவர். அபார ஞாபகசக்தி, தலைக்கனம் இல்லாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பழகக்கூடியவர். எந்தக் கிசுகிசுவுக்கும் ஆளாகாதவர். ஏவிஎம் மின் ஒரு தூண் என்றே சொல்லலாம்.
தகுதியான நல்ல நேரம் வந்த போது தான் அவர் டைரக்டர் பதவியை ஏற்றுக் கொண்டார். அந்தப் பதவி ஒரு சிம்மாசனமாக அவருக்கு அமைந்து அழகுபடுத்தியது.
எத்தனையோ வெற்றிப்படங்கள் அவரைத் தொடர்ந்தது. தயாரிப்பாளர்களையும் அனுசரித்துப் போகும் டைரக்டர்கள் கொஞ்சம் பெயர் இவராகத்தான் இருக்கும்.