எம்ஜிஆருக்கு இப்பொழுது வரை தீவிர ரசிகர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ரசிகர்கள் என்பதை விட அவரை கடவுளாக வணங்கி வருவதை நாம் பார்த்து வருகிறோம். கடவுளுக்கு அப்பாற்பட்டு எவரும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் எம்ஜிஆர் செய்த சில நல்ல விஷயங்கள், அவர் மக்களிடம் நடந்து கொண்ட விதம் குறிப்பாக ஏழை மக்களை அவர் நடத்திய விதம் என இவை எல்லாவற்றையும் பற்றி நாம் படிக்கும் போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.
அவர் காலத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே என்று வருத்தமாகவும் இருக்கிறது. அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் அம்மாவைத்தான் கடவுளுக்கு நிகராக காட்டுவார். அதே போல் குடி, புகை என எதுவுமே எம்ஜிஆர் காட்டியதே கிடையாது. தன்னுடைய படங்கள் இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர கெட்டு போவதற்கான பாதையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.
அப்படித்தான் மக்களிடம் நன் மதிப்பை பெற்று அரசியலிலும் ஒரு நம்பிக்கை மிக்க தலைவராகவும் உயர்ந்தார். இந்த நிலையில் தன்னுடைய கலையுலக வாரிசு என பாக்யராஜை சொன்னதற்கான காரணம் ஒரு வேளை இப்படியாகக் கூட இருக்கலாம் என பாக்யராஜ் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். பாக்யராஜின் படங்கள் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே இருக்கும். பெண்களுக்கு உண்டான மரியாதை , மதிப்பு என பாக்யராஜ் அதை திறம்பட வைத்திருப்பார்.
ஒரு வேளை இதையெல்லாம் பார்த்துவிட்டு கூட எம்ஜிஆர் சொல்லியிருக்கலாம் என பாக்யராஜ் கூறினார். மேலும் பாக்யராஜின் படங்களை தவறாமல் பார்த்து விமர்சனத்தையும் கொடுப்பாராம் எம்ஜிஆர். குறிப்பாக டார்லிங் டார்லிங் படத்தில் சுமனை இரண்டு அடியாவது அடிச்சிருக்கணும். விட்டுட்டனு சொன்னாராம் எம்ஜிஆர். அதற்கு பாக்யராஜ் ‘இல்லங்க கராத்தேனு எல்லாருக்கும் தெரியும். அதனால் எப்படினு’ விட்டுட்டேன்னு சொல்லியிருக்கிறார் பாக்யராஜ்.
யோவ்.. நான் சினிமாவில் 10 பேரை அடிக்கிறேன்னா ஹீரோ எனும் போது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஓரளவு தெரிஞ்சால் போதும். அவனுக்கு கராத்தே தெரியும்னா நீயும் ரெண்டு அடி அடிச்சிருந்தால் ரசிகர்கள் கொஞ்சம் சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று கூறினாராம் எம்ஜிஆர். அதே போல் தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியாரை பாக்யராஜ் பயன்படுத்திய விதமும் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்திருந்ததாம்.
அதில் கதை கேளு கதை கேளு பாடலில் மன்னாதி மன்னனையே பார்த்தவன்டா, மதுரை வீரனையே எதிர்த்தவன்டானு நம்பியார் பாடுவது மாதிரி வரிகள் இருக்கும். இதை எல்லாரும் வேண்டாம்னு சொன்னார்களாம். எம்ஜிஆருக்கு எதிராக கெத்து காட்டுவது மாதிரி இருக்கும்னு பாக்யராஜிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பாக்யராஜ் இல்ல, எம்ஜிஆரை பெருமைப்படுத்துற மாதிரிதான் இருக்கும்னு வச்சிருக்காரு பாக்யராஜ்.
படத்தை பாக்யராஜுடன் எம்ஜிஆர் பார்க்க, இந்த வரிகளை கேட்டதும் வாயை பொத்தியவாறு சிரித்தபடியே பாக்யராஜின் தொடையை அடித்துக் கொண்டு பார்த்து ரசித்தாராம் எம்ஜிஆர்.
