நாடகம் போடும்போது பயங்கர கலாட்டா....! ஈசியாக சமாளித்த எம்.ஆர்.ராதா...நெகிழ்ந்த மகன்

நடிகவேள் எம்ஆர்.ராதாவைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. படத்தில் மட்டுமல்ல. நிஜத்திலும் துணிச்சல் காரர் தான். இவரைப் பற்றி அவரது மகன் எம்.ஆர்.ஆர்.வாசு தன் நினைவுகளை இப்படி சொல்கிறார்.

தந்தை ரொம்ப துணிச்சலானவர். இது அவருடன் பழகியவர்களுக்கும் பழகி வருபவர்களுக்கும் நல்லா தெரியும். இந்த துணவு தான் 6 வயதிலேயே அவரை வீட்டை விட்டு வெளியேறவும் செய்து இருக்கிறது. அது ஒரு அதிசயமான சம்பவம்.

MRR.Vasu

எங்கள் பாட்டி வடை சுட்டு வீட்டில் வைத்திருந்தார். என் தந்தைக்கு அப்போது 7 வயது. என் பாட்டியார் இல்லாத நேரம்..என் சித்தப்பாவை வெளியில் காவலுக்கு வைத்து விட்டு வடைகளைத் திருடி வந்தார் என் தந்தை. காவலுக்கு நின்ற கூலியாக எனது சித்தப்பாவுக்கும் சில வடைகள் கிடைத்தன.

ஆனால் அப்படி என் தந்தை திருடிய போது பாட்டி வந்துவிட்டார். என் தந்தையின் திருட்டு அம்பலமாகி விடவே என் பாட்டியார் அவரைக் கண்டபடி திட்டி விட்டார்.

என் தந்தையாருக்குப் பாட்டியாரின் சுடு சொற்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் கிளப்பி விட்டன. ரோஷமும் துணிச்சலும் ஒன்றையொன்று அவரது மனதை விரட்டி அடிக்க, பெட்டி படுக்கைகளைக் கூட எடுத்துக் கொள்ளாமல் யாருக்கும் சொல்லாமல் வெளியூருக்கு ரயில் ஏறி வந்தார்.

என் தந்தைக்கு அதுதான் முதல் தனி ரயில் பயணம். ஸ்டேஷனுக்கு வருவதும் இதுவே முதல் தடவை. எனவே அங்கு வந்தவருக்குத் திக்குத் திசை தெரியாமல் யாரைக் கேட்பது, என்ன கேட்பது எதைச் செய்வது என்று தெரியாமல் விழித்தபடி ரயில் அடியில் நின்று கொண்டிருந்தார்.

யாரோ ஒருவர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்தார். அவரது மனதில் ஒரு யோசனை பளிச்சிட்டது.

நேரே அவரிடம் போனார். உங்கள் பெட்டியைக் கொடுங்கய்யா...நான் தூக்கி வருகிறேன். ஏதாவது கூலி கொடுங்க என்று கேட்டார். அந்தக் கனமான பெட்டியை ஆறு வயது நிரம்பிய தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டார் என் தந்தை. அதுவே தன் வாழ்க்கைப் பாரத்தை அவரே சுமக்க ஆரம்பித்து விட்டதையும் எடுத்துக்காட்டியது.

MR Ratha

அவர் ஒரு நாடக நடிகர் என்றால் அப்படி ஒன்றும் சாதாரண நடிகர் அல்ல. ரங்கசாமி நாயுடு தான். நாடகக் கம்பெனியையும் நடத்தி வந்தார். தன்னுடன் பேசிக் கொண்டு வருபவர் பிரபல நாடக முதலாளி என தந்தைக்குத் தெரியாது.

ஆனால் பெட்டியைத் தூக்கிக் கொண்டபோது இந்த விவரங்களை என் தந்தையார் அறிந்து கொள்ள முடிந்தது. என் தந்தையைப் பற்றிக் கேட்ட நாயுடுவுக்கு அவர் மீது அனுதாபம் பிறந்தது.

ரங்கசாமி நாயுடுவின் தயவினால் அவரது கம்பெனியிலேயே என் தந்தை சேர்ந்தார். இயல்பாகவே நாடகம், கூத்து என்றால் தந்தைக்குப் பிடிக்கும். நாளடைவில் சித்தப்பாவையும் கம்பெனியில் சேர்த்து விட்டார்.

விளம்பரம் வண்டியில் வேஷம் போட்டு ஆடினார். பின்னர் ராஜபார்ட் நடிகரானார்.

சிறுவயது முதலே பல கஷ்டங்களைப் பார்த்த பிறகு தான் அவர் நடிகராகி உள்ளார். தந்தை எதிர்ப்புக்கு அஞ்சாதவர். முரட்டுத்தனமாகவே வளர்ந்தவர். அதனால் நாடகக்கம்பெனியில் யாருக்கும் பயப்படமாட்டார். அவருடன் பேசவே எல்லோரும் பயப்படுவர். ஆனால் அவர் எப்போதும் நியாயமாகவே பேசுவார்.

விழுப்புரத்தில் நாடக மேடையில் ஏறி என் தந்தை கத்திக் கொண்டு இருந்தார். யார்ரா அவன்? என்னை அடிப்பவர்கள் அடிக்க வரட்டும்...என்று ஒரே காட்டுக்கத்தல்.

MR Ratha

அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவன் கம்பை எடுத்துக் கொண்டு அடிக்க ஓடிவந்தான். அப்போது அருகில் இருந்தவர் அவனை அடித்துத் தள்ளிவிட்டார். இதெல்லாம் ஏன் நடக்குது என்றே தெரியவில்லை.

அதற்குப் பிறகு தான் தெரிந்தது. ஜாதி, மதத்தை எதிர்த்து தந்தை நாடகம் போட்டது. இந்த கலாட்டாவை எந்த நாடகத்திலும் நான் பார்க்கவில்லை.

அதன்பிறகு தான் தெரிந்தது. என் தந்தை தைரியமாக நின்று சமாளித்த விதம். அதைக் கண்ட என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

Related Articles
Next Story
Share it