அமைதிப்படை பார்த்துவிட்டு சத்யராஜிடம் ரஜினி கேட்ட கேள்வி!. ஒரு பிளாஷ்பேக்!..

Published on: April 15, 2026
amaithi padai
---Advertisement---

மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்த 1994ம் வருடம் வெளியான திரைப்படம் அமைதிப்படை. நடப்பு அரசியலை நக்கலடித்து மணிவண்ணன் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது. சத்யராஜ் வழக்கம் போல தனது அலட்டலான நடிப்பில் அசத்தியிருந்தார். அதிலும் அமாவாசையாகவும், அரசியல்வாதியாகவும் நடிப்பில் கலக்கியிருந்தார் சத்யராஜ்..

இந்த படத்தில் இடம்பெற்ற பல அரசியல் வசனங்களை இப்போதுள்ள கால கட்டத்திற்கும் பொருந்துவது போல மணிவண்ணன் எழுதியிருந்தார்.. அதோடு, படத்தில் முக்கிய வேடத்திலும் அவர் நடித்திருந்தார். மேலும், கஸ்தூரி, ரஞ்சிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.. இளையராஜா இசையமைத்திருந்தார். நடப்பு அரசியலை நக்கலடிக்கும் அமைதிப்படை போல ஒரு திரைப்படம் இப்போது வரை வெளியாகவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள்.. மணிவண்ணனுக்கு பின் அப்படி ஒரு படத்தை எடுக்கும் திறமையும், தைரியமும் யாருக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இந்நிலையில்தான், பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய சத்யராஜ் ‘அமைதிப்படை வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த நேரம் திடீரென ரஜினி போனில் கூப்பிட்டார். ‘அமைதிப்படை நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க.. நான் பார்க்கணுமே’ என்றார். ‘திடீர்னு கேட்கிறீங்களே.. எந்த தியேட்டரில் போடுவது’ என கேட்டேன். அவரே ஒரு தியேட்டரின் பெயரை சொன்னார்.. அங்கு அவரும் அவரின் மனைவி லதாவும் படம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்தோம்..

காலை 10 மணிக்கு வருகிறேன் என ரஜினி சொல்லியிருந்தார்.. நானும், மணிவண்ணனும் 10 மணிக்கு சென்றோம். ஆனால் அவர் 9:45 மணிக்கே ரஜினி வந்து படம் ஓடிக் கொண்டிருந்தது.. படம் முழுவதையும் பார்த்த ரஜினி ‘எப்படி தைரியமாக இந்த படத்தை எடுத்தீர்கள்? வசனங்கள் எல்லாம் முன்பே எழுதினீர்களா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தோன்றியதா? என்று பல கேள்விகளை கேட்டார்.. படம் மிகவும் சிறப்பாக இருப்பதாக எங்கள் இருவரையும் பாராட்டி சென்றார்’ என சொல்லியிருக்கிறார்.