இந்த விஷயத்தில் ரஜினி, கமலை விட ஒரு படி மேல்தான் கேப்டன் விஜயகாந்த்...!

Vijayakanth
ரஜினிகாந்த், கமல்ஹாசன் மார்கெட் உச்சத்தில் இருந்த போது அவர்களுக்கு நிகராக போட்டியில் குதித்தவர் விஜயகாந்த். அப்போது அவரது படங்கள் எல்லாமே ஹிட் தான். விஜயகாந்தைக் கருப்பு எம்ஜிஆர் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். எந்தவித பின்புலமும் இல்லாமல் திரை உலகில் தடம் பதித்து முன்னேறியவர் விஜயகாந்த்.
ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமலை விட விஜயகாந்த் படங்கள் அதிகளவில் ஹிட் அடித்தன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித் தான் ஆக வேண்டும்.
1984 ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை விஜயகாந்த் கொடுத்த மெகா ஹிட் படங்கள் ஏராளம். இவருக்கு பி, சி சென்டர்களில் மவுசு அதிகம். அங்கு இவரது படங்கள் வந்து விட்டால் கொடி கட்டிப் பறக்கும். பாமர ரசிகர்கள் வெகுவாக விரும்புவர். காரணம் அவர்களது சாயலில் விஜயகாந்த் கருப்பாகவும் களையாகவும் இருப்பது என்று கூட சொல்லலாம்.
அந்த சமயத்தில் கமலுக்கு வித்தியாசமான படைப்புகளாக அதிகம் வந்தன. அதே போல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அதிரடியாகவும் அட்டகாசமாகவும் ஸ்டைலிஷான படங்கள் வெளியாயின. இருந்தாலும் விஜயகாந்த் படங்கள் தான் முன்னிலையில் இருந்தன.

captain prabakaran
ஒரே ஆண்டில் 18 படங்கள் நடித்து சக்கை போடு போட்டவரும் விஜயகாந்த் தான். அது 1984ம் ஆண்டு.
அப்போது முதல் 10 ஆண்டுகளுக்கு சினிமாவில் அழுத்தமாகக் கால் பதித்தார் விஜயகாந்த். அப்போது வந்த படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.
குறிப்பாக, 1984ல் நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள், 1985ல் நானே ராஜா நானே மந்திரி, 1986ல் அம்மன் கோவில் கிழக்காலே, ஊமை விழிகள், 1987ல் கூலிக்காரன், உழவன் மகன், 1988ல் பூந்தோட்ட காவல் காரன், செந்தூரப் பூவே, 1989ல் பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், 1990ல் புலன்விசாரணை, சத்ரியன் ஆகிய படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டன.

Sathriyan
அதன் பிறகு 1991ல் வெளியானது கேப்டன் பிரபாகரன். இது விஜயகாந்துக்கு 100வது படம். ரஜினி, கமலுக்குக் கூட 100வது படம் அந்த அளவு ஹிட் கொடுக்கவில்லை. ஆனால் விஜயகாந்துக்கு இந்தப் படம் கேப்டன் என்ற அந்தஸ்தையே பெற்றுக் கொடுத்தது. அதே ஆண்டில் வெளியான மாநகர காவல் படமும் ரசிகர்களை சுண்டி இழுத்தது.
1992ல் வெளியான சின்னக்கவுண்டர் படம் விஜயகாந்தை வேற லெவலில் காட்டியது. அவரது ஹேர் ஸ்டைல் இந்தப் படத்தில் வித்தியாசமாக இருந்தது. சின்னக்கவுண்ட ராகவே வாழ்ந்து காட்டிவிட்டார். அதன்பிறகு 1994ல் இவருக்கு ஒரு அதிரடி படம் வந்தது. அது தான் சேதுபதி ஐபிஎஸ்.

Sethupathi IPS
இந்தப் படத்தில் பெரிய வால் கிளாக்கில் ஏறி சாகசம் காட்டுவார். இதில் டூப் போடாமல் நடித்து அசத்தினார். அதே ஆண்டில் தான் குடும்பப்பாங்கான என் ஆசை மச்சான் என்ற படமும் வெளியானது.
1995க்குப் பிறகு இவரது படங்கள் அந்த அளவுக்கு போகவில்லை என்றாலும் வெற்றியைத் தேடித்தர தவறவில்லை. ரசிகர்கள் கடைசி வரை விஜயகாந்தை விட்டு விலகவில்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். அவற்றில் வானத்தைப் போல, வல்லரசு, ரமணா ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
சிறுதயாரிப்பாளர்களின் வசூல் சக்கரவர்த்தி விஜயகாந்த் என்று சொன்னால் மிகையில்லை.
கேப்டன் விஜயகாந்தைப் பற்றி தளபதி விஜய் 1998ல் பேட்டி ஒன்றில் தனது கருத்துகளை இவ்வாறு கூறினார்.

senthoorapandi
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் மாஸ் ஆடியன்ஸ் என 2 வகையான ரசிகர்கள் இருக்காங்க. அதுல மாஸ் ஆடியன்ஸ் ஒரு நடிகனை நடிகனா ஒத்துக்கணும். அது ரொம்ப முக்கியம். அன்றும் இன்றும் பெரிய ஹீரோ அண்ணன் விஜயகாந்த்.
அவரை வச்சு எங்கப்பா ஒரு படம் எடுக்கும்போது அதுல அவரோட தம்பியா என்னை நடிக்க வச்சாங்க. திரையரங்கிற்கு விஜயகாந்த் சாரை பார்க்க வருபவர்கள் என்னையும் கவனிப்பார்கள் என்ற நோக்கத்துடன் தான் அந்தப்படம் எடுக்கப்பட்டது. அந்தப்படம் வெற்றியடைஞ்சது. நாங்க நினைச்சதெல்லாம் நடந்தது.
இவருடன் சேர்ந்து நடித்தால் போதும் நாம மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடலாம் என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் இருந்துள்ளார். அப்படின்னா அவர் எப்படிப்பட்டவர் என்பதை நீங்களே எண்ணிப்பாருங்கள்.