சிங்கிளாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சி - தைரியமாக சொல்லும் நடிகை

sithaara
80களில் குடும்பப்பாங்கான கேரக்டரில் வந்து தமிழ்சினிமாவைக் கலக்கியவர். இவரது படங்கள் என்றாலே ஹிட் தான் என்ற நிலை. தமிழ்ரசிகர்கள் மத்தியில் புது வசந்தமாய், புதுப்புது அர்த்தங்களைத் தந்த நடிகை இவர் தான்.
ஒரு காலத்தில் வசந்தங்கள் வீசிய இவரது வாழக்கையில் என்னென்ன சோகங்கள் நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.சினிமா உலகில் 8 வருடங்கள் வேலை பார்த்துட்டு இயக்குனர்கள், சக நடிகர்கள், தொழில் அதிபர்கள்னு யாரையாவது கல்யாணம் முடிச்சிட்டு லைப்ல செட்டில் ஆகிடுறாங்க.

sithaara
அதே போல் செகண்ட் இன்னிங்ஸ்லயும் அதாவது கல்யாணத்திற்குப் பின்பும் சினிமாவிற்கு வந்து கலக்குற நடிகைகளும் இருக்காங்க. ஆனால் இன்று வரை நான் சிங்கிள் தான் என தைரியமாக ரசிகர்கள் மத்தியில் சொல்லி இருக்கும் நடிகை யார் தெரியுமா? அவர் தான் சித்தாரா.
1989ல் வெளியான கே.பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் தான் இவரது முதல் தமிழ்ப்படம். மலையாள உலகில் இருந்து தமிழுக்கு வந்தவர். காவேரி என்ற மலையாளப்படத்தில் தான் இவர் அறிமுகமானார். இவரது முதல் படமே சூப்பராக அமைந்ததால் தொடர்ந்து நிறைய படங்கள் நடித்தார்.
விக்ரமன் இயக்கிய புதுவசந்தம், கே.எஸ்.ரவிக்குமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன், ரஜினியின் படையப்பா, முகவரி, திருநெல்வேலி என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 2014ல் பூஜை படத்தில் அண்ணி கேரக்டரில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் 2018ல் இவர் நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் கலக்கும் நடிகையாக உள்ளார். சித்தாராவுக்கு கல்யாணமாகி குழந்தைகள் எல்லாம் இருக்கு என ரசிகர்கள் எண்ணிக்கொண்டு உள்ளனர். ஆனால் இப்போ வரைக்கும் கல்யாணம் ஆகாமல் நான் சிங்கிள் தான் என்று சொல்கிறார். தற்போது அம்மா, அண்ணி கேரக்டரில் சித்தாரா நடித்து வருகிறார்.

sithaara
இவர் இன்று வரை திருமணம் செய்யாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்று கேட்கலாம். அதற்கு அவரே சொல்கிறார். இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று இன்று வரை உறுதியாக இருக்கிறேன். என் வாழ்க்கையில முக்கியமான ஒருத்தர நான் இழந்துட்டேன்.
அது காதலர் இல்ல. அப்பா தான். அவர் போனதுக்கு அப்புறம் என்னோட வாழ்க்கைல நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. என் தந்தை பரமேஸ்வரன் நாயர் மீது அதிக பாசத்துடன் இருந்தேன். அவரது மறைவுக்குப் பின் எனக்கு திருமணம் செய்து கொள்ள இஷ்டம் இல்லை.

sithaara
அந்த வகையில நான் இன்னொருத்தர திருமணம் செய்துக்கணுமா? எதுக்கு செய்துக்கணும்? இன்னிக்கு வரை நான் திருமணம் செய்யாம இருக்கேன். இதுக்கு மேலயும் பண்ணிக்க மாட்டேன். இப்படி சிங்கிளாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சி என்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் கொஞ்சம் வருத்தப்படத்தான் செய்றாங்க.
ராஜ் டிவியில் ஆரத்தி, கங்கா யமுனா சரஸ்வதி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். ஜெயா டிவியில் கவரி மான்கள், வசந்த் டிவியில் பராசக்தி ஆகிய தொடர்களிலும் நடித்து தாய்மார்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றார்.