100 பக்க வசனங்களை ஒரே காட்சியில் அசால்ட்டாக பேசிய நடிகை… வேற லெவல் பண்ணிருக்காங்களே!

Sujatha
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் சுஜாதா. மிகவும் கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுஜாதா, முதலில் சினிமாவின் மேல் சுத்தமாக நாட்டமே இல்லாமல் இருந்தார். எனினும் காலம் அவரை சினிமாவிற்குள் இழுத்துக்கொண்டு வந்தது.
சுஜாதா தொடக்கத்தில் பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் “அவள் ஒரு தொடர்கதை”. அத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் வியக்கவைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய சுஜாதா ஒரு காலகட்டத்தில் குணச்சித்திர நடிகையாக மாறிப்போனார். இந்த நிலையில் ஒரு திரைப்படத்தில் 100 பக்க வசனங்களை பேசி நடித்திருக்கிறார் சுஜாதா. அத்திரைப்படம் குறித்து இப்போது பார்க்கலாம்.

1984 ஆம் ஆண்டு சுஜாதா, மோகன், ஜெய்சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விதி”. இத்திரைப்படத்தை கே.விஜயன் என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுதியிருந்தார்.
இதில் சுஜாதா ஒரு வக்கீலாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு நீதிமன்ற காட்சிக்கு கிட்டத்தட்ட 100 பக்கங்களுக்கு வசனம் எழுதியிருந்தாராம் ஆரூர்தாஸ். அதனை பார்த்து ஷாக் ஆகிவிட்டாராம் சுஜாதா. உடனே ஆரூர்தாஸுக்கு தொடர்புகொண்டு, “என்னைய சினிமாவ விட்டே விரட்டியடிச்சிடலாம்ன்னு நினைச்சீங்களா? இவ்வளவு பக்க வசனங்களை எப்படி பேசமுடியும்” என கேட்டாராம்.

அதற்கு ஆரூர்தாஸ் “உங்களுக்கு அந்தளவு திறமை இருக்கிறது. நீங்கள் மிகச் சிறப்பாக இந்த வசனங்களை பேசுவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று ஊக்கமளித்திருக்கிறார். இதன் பிறகுதான் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சுஜாதா. அந்த நீதிமன்ற காட்சியில் சுஜாதா மிகச் சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.