தமிழ்சினிமாவின் ஆல்ரவுண்டு நடிகர்...எவர்கிரீன் கலைஞர் டி.எஸ்.பாலையாவின் அட்டகாசமானபடங்கள்

T.S.Balaiyah
தமிழ்சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வில்லனாக மாறியவர் டி.எஸ்.பாலையா. குணச்சித்திர நடிகர், கண்டிப்பான தந்தை என எவ்வித வேடங்கள் ஆனாலும் சரி. வெளுத்து வாங்கிவிடுவார். மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுகள் இவரைப் போன்று குரல் கொடுக்கத் தவறுவதில்லை.
ஆரம்ப காலத்தில் சர்க்கஸ் கம்பெனியில் கலைஞராக வேண்டும் என்று தான் இவருக்கு ஆர்வம் இருந்தது. பின்னர் அதற்காக வீட்டை விட்டு புறப்பட்ட அவர் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பதற்கு ஏற்ப ஒரு ரவுண்டு அடித்து விட்டு திரும்பவும் வீட்டுக்கே வந்து விட்டார். அப்போது அவருக்கு நாடகக் கம்பெனியில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவரது சம்பளம் வெறும் 6 ரூபாய்.
தொடர்ந்து தனது விடாமுயற்சியால் அவருக்கு படவாய்ப்பு கிடைத்தது. இளமைகாலம் முதல் முதுமை காலம் வரை சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் பேர் வாங்கியவர் டி.எஸ்.பாலையா மட்டும் தான்.

T.S.Balaiyah1
முதுமைகாலத்தில் இவர் நடித்த போது இவருக்கு என்று தனியாக பாடலே வைத்தார்கள். பாமா விஜயத்தில் வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற பாடலையும், திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா என்ற பாடலையும் உதாரணமாகச் சொல்லலாம்.
காமெடி ஆக்டர்களில் பலரை நாம் பார்த்திருப்போம். அதல் இவர் தனி ஆள். இவர் பேசினாலே சிரிப்பு வரும். இவரது குரலும் அதற்கு அவரது பாடி லாங்குவேஜ் ஒத்துழைக்கும் விதமும் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

T.S.Balaiyah3
காமெடிகாட்சிகளில் தான் மனிதர் பின்னிப் பெடல் எடுக்கிறார் என்றால் வில்லன் வேடங்களிலும் இவரை மிஞ்ச ஆள் இல்லை என்ற அளவில் அட்டகாசமாக நடித்திருப்பார்.
பிரபல இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் ஹாலிவுட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்து பல படங்களை அப்போது இயக்கினார். அவர் பாலையாவைப் பார்த்து அடிக்கடி சொல்வாராம்.
பாலையா...நீர் ஹாலிவுட்டுக்கு வந்துவிடுமமய்யா..உம் போன்ற திறமையான நடிகர்கள் தான் ஹாலிவுட்டுக்குத் தேவை..அங்கு உம்மை வரவேற்க சிவப்புக்கம்பளம் தயாராக உள்ளது...என்பாராம்.

T.S.Balaiyah
டி.எஸ்.பாலையா முதன் முதலாக நடித்த படம் சதிலீலாவதி. இந்தப் படத்திற்காக அவருக்கு சம்பளம் ரூ.350. வில்லனாக முதன்முதலில் நடித்த படம் அசோக்குமார்.
கத்தியைத் தீட்டாதே, மணி...புத்தியைத் தீட்டு என்று வேலைக்காரி படத்தில் சொல்வார். ஆர்யமாலா, ஜகதலப்பிரதாபன், மோகினி போன்ற படங்களில் டி.எஸ்.பாலையாவின் நடிப்பு ரொம்பவும் அருமையாக இருக்கும். வில்லன் என்றாலே பாலையா தான் என்று பத்திரிகையாளர்களே சொல்லும்படி ஆனது.

T.S.Balaiya
இந்த வில்லன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு தீனி போட்டார் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம்.
அவரது சித்ரா என்ற படத்தில் பாலையாவை ஹீரோவாகப் போட்டார். கே.எஸ்.வி.வசந்தா தான் ஜோடி. ஹீரோவுக்கும் நான் பொருத்தமானவன் தான் என நிரூபித்தார் பாலையா.
தொடர்ந்து அவர் சண்பகவல்லி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் தந்தை வேஷத்தில் வந்து கலகலப்பூட்டினார். தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் வித்வானாக வந்து உண்மையான தவில் வித்வானே மூக்கில் விரலை வைக்கும்படி அற்புதமாக நடித்து அசத்தினார்.