ரஜினியையும் சிம்புவையும் நம்பி 3 வருஷம் காலி... மணிகண்டனிடம் போன இயக்குனர்!...
Desingu Periyasamy: கோலிவுட்டில் ஒரு அறிமுக இயக்குனருக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து எல்லாம் சரியாக நடந்து படம் ரிலீஸாகி அது வெற்றி அடைவதே பெரிய போராட்டம். ஆனால், அப்படி முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்தும் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்காமல் அவர்கள் சும்மாவே இருக்கும் நிலையும் சிலருக்கு ஏற்படும். அதற்கு காரணம் பெரிய நடிகர்களை நம்பி அவர்கள் காத்திருப்பதுதான்.
அதாவது ஒரு படம் வெற்றி கொடுத்த இயக்குனரை சில முன்னணி நடிகர்கள் அழைத்து ‘நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என்பார்கள். அட 2வது படம் பெரிய ஹீரோ என சந்தோஷப்படுவார் அந்த இயக்குனர். ‘இப்போது இந்த படத்தில் நடித்து வருகிறேன். நீங்கள் கதையை உருவாக்குங்கள். இந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன்’ என்பார் நடிகர். இயக்குனரும் அவரை நம்பி பல மாதங்கள் உழைத்து ஒரு கதையை உருவாக்குவார்.
கதையை கேட்ட நடிகர் உடனே கால்ஷீட் கொடுக்கமாட்டார். இன்னொரு படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்பார். இதிலேயே சில வருடங்கள் போய்விடும். இப்படி முதல் படம் வெற்றி கொடுத்த பல இயக்குனர்களின் கெரியரை பல முன்னணி நடிகர்கள் காலி செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் தேசிங்கு பெரியசாமி. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். முதல் படமே ஹிட்.
ரஜினியின் தீவிர ரசிகர் இவர். எனவே, ரஜினி இவரை அழைத்து வழக்கம்போல் ‘படம் சூப்பர். எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என்றார். அட தலைவரே சொல்லிட்டரே என குஷியான தேசிங்கு ஒரு சரித்திரை கதையை உருவாக்கி ரஜினியிடம் சொன்னார். ரஜினிக்கு கதை பிடித்திருந்தாலும் ‘இந்த கதையை இவர் சரியாக எடுப்பாரா?’ என்கிற சந்தேகம் வரவே ‘நாம மறுபடி சந்திப்போம்’ என சொல்லி அனுப்பிவிட்டார். இதில் ஒரு வருடம் போனது.
அந்த கதையை சிம்புவிடம் தேசிங்கு சொல்ல அவருக்கு பிடித்துப்போனது. கதையை கேட்ட கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்க முடிவு செய்து அறிவிப்பெல்லாம் வெளியானது. பல மாதங்கள் பட வேலைகள் நடந்தது. ஆனால், ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களுக்கு கொடுக்கும் விலையை தடாலென குறைத்துவிட்டதால் கமல் ‘இப்போது இது முடியாது’ என சொல்லிவிட்டார். அதோடு சிம்புவை தன்னுடன் தக் லைப் படத்தில் நடிக்க வைத்தார். தேசிங்கு பெரியசாமி வேறு எந்த படத்திற்கும் போகாமல் அமைதியாக இருந்தார். அதற்கு காரணம் ‘நானே இந்த படத்தை தயாரிக்கிறேன்’ என சிம்பு சொல்லிவிட்டார். படத்தின் பட்ஜெட் 150 கோடி என சொல்லப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனரும், 50வது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 51வது படத்தை அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மற்றொரு ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து 50வது படத்தை உருவாக்க சிம்பு திட்டமிட்டார் சிம்பு. ஆனால், இதுவரை யாரும் கிடைக்கவில்லை. அதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போய்விட்டர் சிம்பு.
கண்ணும் கண்னும் கொள்ளையடித்தால் படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது. எனவே, ரஜினி, சிம்பு என பல வருடங்களை வீணடித்துவிட்ட தேசிங்கு பெரியசாமி இதற்கு மேலும் காத்திருந்தால் நாம் காலி என நினைத்தாரோ என்னவோ, நடிகர் மணிகண்டனை சந்தித்து அவரிடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார் என்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருக்கிறது. அதேநேரம், வெற்றிமாறன் படத்தை முடித்தபின் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.