மரணம் குறித்து முன்பே கணித்த ராஜேஷ்... இது அவர் விரும்பியதுதான்... நடிகர் இளவரசு தகவல்

By :  SANKARAN
Published On 2025-05-29 11:40 IST   |   Updated On 2025-05-29 11:40:00 IST

பழம்பெரும் நடிகர் ராஜேஷ் இன்று காலமானார். இது திரையுலகினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இன்று காலை குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நடிகர் ராஜேஷ் காலமானார். டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் என பன்முகத்திறன் கொண்டவர்.

ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை 150 படங்களில் நடித்துள்ளார். திருவாரூர் மன்னார் குடியில் 20.12.1949ல் பிறந்தவர். தமிழை அழகாக உச்சரிப்பார். கன்னிப்பருவத்திலே படத்தில் இருந்து சர்க்கார் வரை நடித்துள்ளார். திரையுலகில் 45 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். நடிகர் எஸ்எஸ்ஆருக்குப் பிறகு தமிழை சுத்தமாக உச்சரிப்பவர்.

7 ஆண்டுகாலம் ஆசிரியராக இருந்துள்ளதால் தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டவர். நாத்திகத்தில் ஈடுபாடு கொண்டவர். இருந்தாலும் கடைசியில் ஜோதிடத்தையும் நன்கு கற்றுக் கொண்டார்.இவர் தமிழ்நாடு எம்ஜிஆர் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


1979ல் பாலகுரு இயக்கத்தில் கன்னிப்பருவத்திலே படத்தில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் திரைக்கதையை பாக்கியராஜ் எழுதி நடித்தார். அன்று முதல் பாக்கியராஜ் உடன் நல்ல நட்பு கொண்டார். 1981ல் நடிகர் பாக்கியராஜ் உடன் இணைந்து அந்த 7 நாள்கள் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராஜேஷ் தான் செகண்ட் ஹீரோ. அருமையான நடிப்பு. அதே போல பாக்கியராஜ் நடித்த தாவணிக்கனவுகள் படத்திலும் ராஜேஷ் நடித்துள்ளார். இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து நடிகர் இளவரசு இப்படி சொல்கிறார். இது அவர் விரும்பிய மரணம். '75 வருஷத்துக்கு மேல உயிரோடு இருக்குறது அநாகரிகம்னு நினைக்கிறேன். ஆரோக்கியமா போயிடணும்'னு சொன்னாராம். அவர் விரும்புன மாதிரியே யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் இவர் இறந்துள்ளார். இது அவரைப் பொருத்தவரை நல்ல மரணம்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News