சம்பள பாக்கிக்கு பதிலாக கொக்கைனா? ஸ்ரீகாந்த் விஷயத்தில் அடுத்தடுத்து இருக்கும் மர்மம்
srikanth
தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் நடிகராவதற்கு முன் வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் இவர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகுதான் 2002 ஆம் ஆண்டு ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே 100 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்திற்கு பிறகு இளம் பெண்களை மயக்கும் ஒரு காதல் மன்னனாக அனைவரும் அவரை பார்க்க ஆரம்பித்தனர்.
ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு கைக் கொடுத்தது. அதில் இவர் 12பி மற்றும் காதல் வைரஸ் போன்ற படங்களை தவறவிட்டார். ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, கனாக் கண்டேன், மனசெல்லாம், பம்பர கண்ணாலே போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ஸ்ரீகாந்த். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளிலும் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
நடிகைகளில் சினேகா, த்ரிஷா, மீரா ஜாஸ்மின் இவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி இவருக்கு இருந்தது. குறிப்பாக சினேகா, ஸ்ரீகாந்த் கெமிஸ்ட்ரி அனைவருக்குமே பிடித்தது. இவர்களை பற்றி கூட கிசுகிசுக்கள் வந்தன. அதுவரை ஒரு லவ்வர் பாயாக பார்க்கப்பட்ட ஸ்ரீகாந்த் 2008 ஆம் ஆண்டில் வெளியான பூ படத்தில் நடித்ததன் மூலம் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் ஸ்ரீகாந்த் சளைத்தவர் இல்லை என்பதை நிருபித்தார்.
பூ படத்திற்கு பிறகு நண்பன் படத்தில் விஜயுடன் நடித்தார். நண்பன் படத்திற்கு பிறகு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அவருக்கு கைகொடுக்க வில்லை. இந்த நிலையில்தான் நேற்று போதை பொருள் பயன்படுத்தியிருப்பதாக போலீஸரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஸ்ரீகாந்த். இது சம்பந்தமான வழக்குதான் இப்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் தன்னுடைய வாக்கு மூலத்தில் படத்தில் நடித்த பணத்தில் ரூ.10 லட்சம் பாக்கி வைத்திருந்தார்கள். அதற்கு பதிலாக 3 முறை கொக்கைன் கொடுக்கப்பட்டது. 4வது முறையாக நானே கொக்கைன் கேட்கும் அளவிற்கு அடிமையானேன் என தனது வாக்கு மூலத்தில் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பிரசாத் மற்றும் ஸ்ரீகாந்தை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் திட்டமிட்டிருக்கிறார்கள்.