23 வயதில் ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் போட்ட ஆர்.கே.செல்வமணி... எல்லாத்துக்கும் காரணம் அவரா?
விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் கேப்டன் பிரபாகரன். படம் வந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்துக்கு முன் கேப்டன் என்ற அடைமொழியும் ஒட்டிக் கொண்டது.
விஜயகாந்துடன் சரத்குமார், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன், காந்திமதி, நம்பியார், பொன்னம்பலம் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர். படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி. வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். இந்தப் படத்தின் கோர்ட் சீன்ல விஜயகாந்த் பேசுற வசனம் மாஸாக இருக்கும். 1991ல் வெளியானது.
படம் முழுவதுமே அதிரடி தான். இரண்டு பாடல் என்றாலும் தெறிக்க விட்டுருப்பாங்க. பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா என இரு பாடல்கள் உள்ளன. இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் ஃப்ரஷ்ஷா இருக்கும். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பைட்டும் சூப்பர்.
சந்தனமர கடத்தல் மன்னன் வீரப்பனைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் போடப்பட்டதாம். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி என்ன சொல்றாருன்னு பாருங்க.
கேப்டன் பிரபாகரன் படம் எடுக்கும்போது எனக்கு 23 வயசுதான். அந்தப் படத்துக்காக ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் போட்டேன். அந்த வயசுல அவ்ளோ தைரியம் வர காரணம் இயக்குனர் மணிவண் ணன் தான். அதுக்கு முன்னாடி வரைக்கும் நான் ரொம்ப பயந்தாங்கோலி. ஆனா அவர்கிட்ட ஒர்க் பண்ணும் போது கத்துக்கிட்டது.
எது இருந்தாலும் படம் எடுக்கலாம். எது இல்லன்னாலும் படம் எடுக்கலாம். அப்படிங்கற தைரியத்தை எனக்குள்ள உருவாக்கி வளர்த்து விட்டது மணி சார் தான் என்கிறார் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூலையும் வாரிக் குவித்து 300 நாள்கள் ஓடியது. விஜயகாந்துக்கு இது 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிவண்ணனிடம் ஆர்.கே.செல்வமணி உதவியாளராக பணிபுரிந்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் புலன்விசாரணை. அதுவும் ஹிட் அடித்தது. விஜயகாந்த் படம்தான்.