GHAATI: காடி படத்தின் சாய்லோரே சாங்... எப்படி இருக்கு? விட்ட இடத்தைப் பிடிப்பாரா விக்ரம்பிரபு?

விக்ரம்பிரபு, அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் காடி படத்தில் இருந்து சாய்லோரே என்ற பாடல் இன்று வெளியாகி உள்ளது. இது எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம்.
சாய்லோரே... அனுஷ்கா, விக்ரம் பிரபு போடும் ஆட்டம் இளசுகளைத் துள்ள வைக்கும் ரகம். சாகர் நாகவெல்லி இசையில் பாடல் தெறிக்க விடுகிறது. மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.
பாடல் வீடியோவைப் பார்க்கும்போது ஒரு திருவிழா பின்னணியில் வருவது போல் உள்ளது. இந்தப் பாடலின் வரிகளைக் கேட்டால் 'வெட்கத்தை விட்டுப்புட்டு கட்டில்ல கட்டிக்கிட்டு பத்துப்புள்ள பெத்துக்கிடட்டும்... ஏ மொத இரவு கிடக்கு இளசா, ஏ அவன இவ பிரிப்பா பெரிசா' என்ற வரிகளைப் பார்க்கும்போது எப்படி இதுல போய் இப்படி வரிகள் எல்லாம் வருதுன்னு எண்ணத் தோன்றுகிறது. இப்போது யார் வரிகளைப் பார்க்கிறா? குத்துப் பாட்டா? மியூசிக் நல்லாருக்கா? ஆட்டம் போடலாம்மான்னுதானே பார்க்கிறாங்க.
விக்ரம் பிரபுவுக்கு சமீபகாலமாக டாணாக்காரனைத் தவிர எந்தப் படமும் பெரிசாகப் போகவில்லை. கிரிஷ் ஜாகரியமுடி இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ரவீந்திர விஜய், விடிவி கணேஷ் நடிக்கும் இந்தப் படத்துக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குற்றவாளியான ஒருவன் எப்படி பெரிய லெஜண்டாகிறான் என்பதே கதை. இந்தப் படம் வரும் ஜூலை 11ல் வெளியாகிறது.
அனுஷ்கா ஷெட்டிக்கு பாகுபலி சூப்பர்ஹிட் கொடுத்த படம். அவரது ஸ்டைலான நடையும் அவர் போடும் துள்ளலான ஆட்டமும் ரசிகர்களை வசீகரிக்கச் செய்கிறது. கோரியோ கிராபராக ராஜூசுந்தரம் பின்னிப் பெடல் எடுத்திருக்கிறார். தோட்டாதரணியின் செட்டிங் பிரமிக்க வைக்கிறது.
பாடலில் 'மோளத்தைக் கொட்டு கொட்டு மாமா... சாட்டெல்லாம் கொண்டாட்டம்தானா' என்று வரும் வரிகள் துள்ள வைக்கிறது. இது ஒரு ஆக்ஷன் கிரைம் ஸ்டோரியாக உருவாகிறது. தெலுங்கில் விக்ரம் பிரபு நடிக்கும் முதல் படம் இது. தமிழிலும் டப் செய்யப்படுகிறது. ஹிட்டாகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.