இத என்னைக்கும் அவர் சொன்னதில்லை!. கெத்துன்னா அதுதான்!.. ராஜாவை பாராட்டிய இசையமைப்பாளர்!..

பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இளையராஜா பற்றி பேசியிருக்கிறார்.

By :  Murugan
Update: 2024-10-07 08:11 GMT

இளையராஜா

Ilayaraja: 80களில் இசையுலகை ஆண்டவர் இளையராஜா. இப்போதும் ஆண்டு கொண்டுதான் இருக்கிறார். அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் இப்போது வரை இயங்கிக்கொண்டே இருக்கிறார். 83 வயதிலும் இசை அவரை இயங்க வைத்துகொண்டே இருக்கிறது.

திரைப்படங்களுக்கு இசையமைப்பது, இசைக்கச்சேரிகளை நடத்துவது, சிம்பொனி அமைப்பது என இசையில் பல துறைகளிலும் கலக்கி வருகிறார். இளையராஜா ஈகோ பிடித்தவர், திமிர் பிடித்தவர், பணத்தாசை பிடித்தவர் என பலர் சொன்னாலும் அதையெல்லாம் அவர் தலையில் ஏற்றிக்கொள்வதில்லை.

‘என்னை தலைக்கணம் பிடித்தவன் என சொல்பவனுக்கு எவ்வளவு தலைக்கணம் இருக்கும்?’ என கேள்வி கேட்டவர்தான் இளையராஜா. தனது வாழ்க்கையை பற்றி பேச அவர் எங்குமே தயங்கியதில்லை. 80களில் அவரின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. பல மொக்கை திரைப்படங்களையும் தனது இசையால் ஓட வைத்திருக்கிறார்.

ஒரு காட்சியை படம் பிடிக்கும்போதே ‘இது போதும். மிச்சத்தை இளையராஜா பார்த்துக்கொள்வார்’ என இயக்குனர் நம்பினார்கள். அந்த நம்பிக்கையை ராஜா ஒரு நாளும் பொய்யாக்கியது இல்லை. இயக்குனரால் சொல்ல முடியாத உணர்வுகளையும் ராஜா தனது பின்னணி இசை மூலம் ரசிகர்களுக்கு கடத்திவிடுவார்.

இப்போது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ராஜாவை போல ஒரு இசையமைப்பாளார் இனிமேல் பிறக்கப்போவது இல்லை. ஒரு நாளைக்கு 5 படங்களுக்கு பாடல்கள் கொடுப்பார். ஒருபக்கம், சில படங்களுக்கு பின்னணி இசை அமைத்து கொண்டிருப்பார். அவரை போல வேகமாக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யாருமில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில், தமிழில் பல படங்களுக்கும் இசையமைத்துள்ள ஷான் ரோல்டன் ‘உண்மையான கெத்துன்னா என்ன தெரியுமா?.. ஹீரோ யாருன்னு கவலை இல்ல. இயக்குனர் பெரிய ஆளா இருக்கணும்னு அவசியம் இல்ல.. ஆனாலும், இளையராஜா நல்ல இசையை கொடுப்பார். அதுதான் கெத்து.. அதனாலதான் திரையுலகில் இவ்வளவு பேர் அவரை மதிக்கிறார்கள். இவரு வந்தாதான் படம் பண்ணுவேன். அவரு வந்தாதான் படம் பண்ணுவேன்னு அவரு என்னைக்கும் சொன்னதில்ல.. அதுதான் ராஜா சார்’ என நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News