ராஜேஷ் உனக்கு ஏன் இவ்ளோ அவசரம்!.. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதானே.. எஸ்.வி. சேகர் உருக்கம்

49 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்று விளங்கிய நடிகர் ராஜேஷ் இன்று காலமாகிய நிலையில் பல பிரபலங்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த ராஜேஷ் பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் சிறு வேடத்தில் நடித்து அறிமுகமானார். கன்னி பருவத்திலே, அந்த 7 நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து கமலஹாசனுடன் சத்யா, மகாநதி, விருமாண்டி போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றினார். சில படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
ராஜேஷ் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் கார்த்திகை தீபம் தொடரிலும் நடித்துக்கொண்டிருந்தார். மேலும், ராஜேஷ் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். ஜோன் சில்வியா வனத்திராயரை மணந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற மகளும் மற்றும் தீபக் என்ற மகனும் உள்ளனர். மனைவி ஜோன் சில்வியா சில அண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்.
ராஜேஷ் உடல்நலக் குறைவு இன்று சென்னையில் காலமானார் . அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மகள் திவ்யா அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கள் தெரிவித்த எஸ்.வி.சேகர் , என்ன ராஜேஷ் இப்படி பண்ணிட்டிஙக நேத்து 6 மணிக்கு போன் பண்ணேன் லைன் கிடைக்கல நாளைக்கு பண்ணிக்கலாம்னு நெனச்சா, இன்னைக்கு பாத்தா தலைல இடி விழுந்தா மாதிரி நடிகர் ராஜேஷ் மரணம்னு நியூஸ் வருது, என்ன அவசரம் உங்களுக்கு எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசுதானே, நானும் நீங்களும் ஒன்னாதானே சினிமாவில் பயணம் செய்தோம் , அதிபுத்திசாலியான வெகு சிறந்தவர்களுள் நீங்களும் ஒருவர், ஆசிரியராக பணிபுரிந்து கடைசி வரை யாருக்காவது எதாவது சொல்லிக்கொடுக்கணும் என்ற ஆர்வத்துடன் இருந்தீங்க என்று பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.