ரஜினி ஏன் கமலுக்கு ஆதரவா பேச மாட்டேங்குறார்?! என்ன பயம்?.. போட்டு பொளக்கும் பிரபலம்!...

Thuglife: கமலின் மீது அதிக மரியாதையும், அன்பும் கொண்டவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். சமீபத்தில் நடந்த தக் லைப் பட புரமோஷன் விழாவில் அவர் கலந்துகொண்ட போது சிவ்ராஜ்குமாருக்கு நன்றி சொன்ன கமல் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என கூறும்படி தமிழில் இருந்து உருவான மொழிதான் கன்னடம் என கூறினார். இது கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா நடிகர்கள் எப்போது கர்நாடகாவுக்கு எதிராக பேசுவார்கள் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அவர்கள் ‘கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம்’ என பொங்கினார்கள். இதற்கு ரஜினி, சத்யராஜ் போன்றவர்கள் தங்களின் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள்.
ஆனால், கமலோ ‘நான் சொன்னது அன்பின் வெளிப்பாடு மட்டுமே. அன்பு மன்னிப்பு கேட்காது. வரலாற்று அறிஞர்கள் சொன்னதைத்தான் நான் சொன்னேன். மொழி பற்றிய அறிவெல்லாம் அரசியல்வாதிகளுக்கு இல்லை. மன்னிப்பு கேட்க முடியாது’ என சொல்லிவிட்டார். வருகிற 5ம் தேதி படம் ரிலீஸ் என்கிற நிலையில் கமல் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
எனவே கர்நாடகாவில் தக் லைப் படம் வெளியாகாது என்றே கணிக்கப்படுகிறது. தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் ஒரு கன்னட அமைப்பு மிரட்டியிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் இந்த விவகாரம் பற்றி பேசிய சினிமா செய்தியாளர் பிஸ்மி ரஜினியை விமர்சித்து பேசியிருக்கிறார்.
கமலை தன்னுடைய பல வருட நண்பர் என சொல்கிறார் ரஜினி. இப்போது கமல் படத்திற்கு இப்படி ஒரு பிரச்சனை. ஆனால், ரஜினி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருக்கிறார். கமல் வரலாற்று தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பேசியிருக்கிறார். அவர் சொல்வதை ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விருப்பம்.
ஆனால், அவரின் படத்தை தடை செய்வோம் என சொல்வது தவறு. கர்நாடகாவை சேர்ந்த நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். உங்களை போல தமிழ்நாட்டு மக்களும் என்னை சொன்னால் என்னாவது?’ என சொல்லியிருக்க வேண்டும். ஆனால், வாய் மூடி மவுனம் காக்கிறார். அதேபோல், கமலுக்கு ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகும் ஆதரவு கொடுத்தால் அவர்கள் அடங்கி இருப்பார்கள். ஆனால், எல்லோரும் பயப்படுகிறார்கள்’ என விளாசியிருக்கிறார்.