34 ஆண்டுகள் ஆகியும் பேசும் படமாக மாநகர காவல்... ஆனா இயக்குனர் தான் பரிதாபம்!

By :  SANKARAN
Published On 2025-06-29 14:10 IST   |   Updated On 2025-06-29 14:10:00 IST

1991ல் எம்.தியாகராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சூப்பர்ஹிட் படம் மாநகர காவல்.

ஏவிஎம் நிறுவனம் தனது 150வது படமாக இதைத் தயாரித்தது. கதை, திரைக்கதை, இயக்கத்தை தியாகராஜன் கவனித்துள்ளார் வசனம் எழுதியவர் லியாகத் அலிகான். சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார். விஜயகாந்துடன் இணைந்து சுமா, நாசர், ஆனந்த்ராஜ், நம்பியார், லட்சுமி, செந்தில், தியாகு, சின்னி ஜெயந்த், பொன்னம்பலம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தியப் பிரதமரை படுகொலை செய்யத் திட்டம் போடுகிறார்கள். அதில் இருந்து காவல்துறை அதிகாரியாக வரும் விஜயகாந்த் அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை, காலை நேரம், தலை வாரி பூச்சூடும், திருவாரூர் தங்க தேர், தோடி ராகம் பாட வா ஆகிய இனிமையான பாடல்கள் உள்ளன.

மாநகர காவல் படத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் காட்சிகள் விறுவிறுப்பாக அமைந்து இருந்தன. பைட், பாட்டு, சென்டிமென்ட் என எல்லாமே சூப்பர். இந்தப் படம் வெளியான புதிதில் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 


மாநகர காவல் 28.6.1991ல் ரிலீஸ் ஆனது. படம் வந்து 34 ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் அதிகாரி கெட்டப்புக்கு கனகச்சிதமாகப் பொருந்தும் நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். இவர் காவல்துறை அதிகாரியாக நடித்த அத்தனை படங்களும் ஹிட். கேப்டன் பிரபாகரன், மாநகர காவல், ஆனஸ்ட்ராஜ், ரமணா போன்ற படங்களைச் சொல்லலாம்.

இந்தப் படத்தின் இயக்குனர் எம்.தியாகராஜன் மாநகர காவல் மட்டுமே இயக்கியுள்ளார். அதன்பிறகு விபத்து ஒன்றில் சிக்கி உடல் நலிவுற்றார். வேறு எந்தப் படங்களையும் இயக்கவில்லை. ஆனால் மாநகர காவல் 2 இயக்க வேண்டும் என்று விரும்பினாராம். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். அதுவும் 8.12.2021ல் ஏவிஎம் ஸ்டுடியோ வாசலில் அனாதையாக இறந்து கிடந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. 

Tags:    

Similar News