சிவாஜியுடன் பணியாற்றிய வசனகர்த்தா தயாரிப்பாளர் ஆனது எப்படி? பிரபலம் சொன்ன தகவல்
சினிமாவில் அறிமுகமான கட்டத்திலேயே எம்ஜிஆர் மற்றும் சிவாஜியோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர் வி.சி.குகநாதன். 1970ல் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் வெளியான எங்க மாமா படத்தில் சிவாஜியோடு இணைந்து பணியாற்றினார். அந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதியவர் வி.சி.குகநாதன்தான். என்றாலும் அவருக்கு சிவாஜியோடு தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்புகள் வரவில்லை.
உயர்ந்த மனிதன் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு குகநாதனுக்கு வந்தது. உயர்ந்த மனிதன் படத்தை ஏவிஎம். நிறுவனம் தயாரித்தது. அந்த நிறுவனத்தைப் பொருத்தவரை ஆஸ்தான எழுத்தாளர்னா ஜாவர் சீத்தாராமன்தான். அந்த நேரத்தில் மின்னல், மழை, மோகினி என்ற படத்தை ஜாவர் சீத்தாராமன் இயக்கிக் கொண்டு இருந்தார்.
அந்தப் படத்துக்கு அவர் போக வேண்டி இருந்ததால உயர்ந்த மனிதன் படத்துக்கு ஒரு சில காட்சிகள்ல அவருக்கு வசனம் எழுத முடியல. அப்படிப்பட்ட சூழலில்தான் குகநாதனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தது ஏவிஎம். நிறுவனம். குகநாதனைப் பொருத்தவரை அந்த நிறுவனத்துடன் மிக நெருக்கமான நட்பில் இருந்தார். அதனால்தான் அந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அந்தப் படத்தில் தான் எழுதிய வசனத்தை சிவாஜியிடம் படித்துக் காட்டினார். அதில் இருந்த நேர்த்தியைப் பார்த்த சிவாஜி தனது அடுத்த படமான தங்கைக்காக படத்துக்கும் வசனம் எழுதும் வாய்ப்பைக் குகநாதனுக்குப் பெற்றுத் தந்தார். அதன்பிறகு சிவாஜியை வைத்துப் படம் தயாரிக்குற வாய்ப்பே அவருக்குக் கிடைத்தது என்பது வேறு விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
முதல் குரல் என்ற படத்தை வி.சி.குகநாதன் தான் தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தில் சிவாஜி உடன் இணைந்து அர்ஜூன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் வெளியான இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசை அமைத்துள்ளார்.