இந்த இடத்துல பாட்டு வரணும்!.. கமலுக்கே சொல்லிக்கொடுத்த இளையராஜா!.. அட அந்த பாட்டா!..

By :  MURUGAN
Published On 2025-06-16 12:13 IST   |   Updated On 2025-06-16 12:13:00 IST

Ilayaraja: 4 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல். டீன் ஏஜில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பாலச்சந்தர் மூலம் பட்டை தீட்டப்பட்டு சினிமாவில் ஜொலித்தவர். ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்தாலும் மாற்று சினிமா மீது எப்போதும் ஆர்வம் கொண்டவராகவே கமல் இருக்கிறார். அதனால்தான் சினிமாவில் பல பரிசோதனை முயற்சிகளை இவர் செய்து பார்த்திருக்கிறார்.

அவற்றில் சில வெற்றிகளும், பல தோல்விகளும் அடங்கியிருக்கிறது. அவரின் குருதிப்புனல், ஹேராம், உத்தம வில்லன் போன்ற படங்கள் ஓடவில்லை. இதில் ஹேராம் படத்தை கமல் எழுதி, தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கதையை எழுதியிருந்தார் கமல்.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ராணி முகர்ஜி, வசுந்த்ரா தாஸ், கவிஞர் வாலி, அதுல் குல்கர்ணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு முதலில் வேறொருவர் இசையமைத்தார். ஆனால், கமலுக்கு ஏதோ திருப்தி இல்லை. எனவே, இளையராஜாவிடம் சென்று இசையமைக்குமாறு கேட்டார். இத்தனைக்கும் பாடல்களுக்கான காட்சிகளை எல்லாம் கமல் எடுத்து முடித்திருந்தார். எனவே, எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்றவாறு பாடல்களை போட்டு கொடுத்தார் இளையராஜா. அதிலும், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ படல் அற்புதமான மெலடியாக இருந்தது.


இந்நிலையில், ஒரு இசைக்கச்சேரியில் இளையராஜா பேசும்போது இந்த படம் பற்றி ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். இந்த படத்தில் சில காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்குமாறு என்னிடம் கமல் சொன்னார். எனக்கோ அந்த இடத்தில் ஒரு பாடல் வரவேண்டும் என தோன்றியது. இதை கமலிடம் சொன்ன போது ‘திரைக்கதையில் இந்த இடத்தில் பாடல் இல்லை. பேக்ரவுண்டு மியூசிக் மட்டும் போடுங்கள்’ என்றார்.

‘இந்த இடத்தில் பாட்டு இருக்கு’ என நான் குரலை உயர்த்தி சொன்னதும் ‘சரி என்னவோ செய்யுங்கள்’ என சொன்னார். அப்படி நான் போட்ட பாட்டுதான் ‘இசையில் தொடங்குதம்மா’. இந்த பாடலை ரிக்கார்டிங் செய்யும் போது கமல் டென்ஷனாக இருந்தார். இது சரியா வருமா என்பது போல குறுக்கும், மறுக்கும் நடந்துகொண்டே இருந்தார். அதன்பின் பாடலை கேட்டவுடன் ‘திரைக்கதையில் இந்த இடத்துல பாட்டு இருக்கு. இல்லனா உங்களுக்கு எப்படி தெரியும்?’ என கேட்டார்’ என இளையராஜா பகிர்ந்து கொண்டார்.

Tags:    

Similar News