சிவாஜியின் முதுகு கூட நடித்ததாம்... பிரமித்துப்போன நடிகர்...! அட அந்தப் படமா?
நடிகர் திலகம் என்றால் அது சிவாஜிதான். அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களும் நடிக்கும். ஒரே கேரக்டராக இருந்தாலும் பலவிதமான பாடி லாங்குவேஜைக் கொண்டு வருவார் சிவாஜி. சினிமாவில் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? வசனம் பேச முடியுமா? அதீதமான உணர்ச்;சிகளைக் காட்ட முடியுமா என்று வியக்க வைத்தார்.
அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரமாகவே மாறி விடுவார் என்று சொல்வதை விட ஒரு படி மேல போய் மிகையான நடிப்பைக் கொடுத்து விடுவார் என்றே சொல்லலாம். ஆனாலும் அது ரசிக்கத்தக்க வகையில் இருப்பதுதான் விசேஷம். இது வேறெந்த நடிகர்களுக்கும் பொருந்தாது. ஓவர் ஆக்டிங் என ஒதுக்கி விடுவர்.
தன்னைவிட அதிக வயதுள்ள நாயகர்களே அப்போது இளைஞர் வேடத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடித்து அனைவரையும் வியக்க வைத்தார் சிவாஜி.
திருவருட்செல்வர் படத்தில் கூன் விழுந்த முதியவர் வேடத்தில் நடித்தார். அதே நேரம் அவர் போலீஸாக நடித்த தங்கப்பதக்கம் படத்தில் ஒரு கம்பீரம், மிடுக்கைக் கொண்டு வந்தார். தெய்வமகன் படத்தில் கோரமுகம் காட்டியும் தனது அதீத நடிப்பாற்றலால் ரசிக்க வைக்க முடியும் என நிரூபித்தார். கௌரவம் படமும் அவருக்குப் பெரிய கௌரவத்தைத் தந்தது.
தெய்வமகன் படத்தில் மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்ற உணர்ச்சியை முகத்தில் அழகாகக் காட்டி இருந்தார். சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரவத்தையும், தன்னை அலைக்கழிப்பதையும் சிவாஜி வெகுநேர்த்தியாக நுட்பமாக முகத்திலும் உடல் மொழியிலும் காட்டி இருந்தார்.
ஒரு காட்சியில் கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி விசும்பி விசும்பி அழுவார் சிவாஜி. அப்போது எதிரில் நின்ற மேஜர் சுந்தரராஜனோ அசைவே இல்லாமல் அவரையே பார்த்தபடி நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் சிவாஜியின் முதுகு கூட நடிக்கிறது என்று எழுதியிருந்தார்களாம். அதைப் பற்றி ஒருமுறை மேஜரிடம் கேட்டபோது சிவாஜி நடித்துக் கொண்டு இருக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.