கமலை பத்தி நான் சொன்னது வேற!.. அந்தர் பல்டி அடித்த ராஜகுமாரன்... அடி பலமோ!...
நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் என்பதை விட நடிகை தேவயாணியின் கணவர் என்று சொன்னால்தான் ராஜகுமாரனை எல்லோருக்கும் தெரியும். திருமணத்திற்கு பின் தேவயாணியை வைத்து காதலுடன் என்கிற படத்தை இயக்கினார். அதன்பின் திருமதி தமிழ் என்கிற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க துவங்கினார். சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் காமெடி வேடத்தில் நடித்தார். அதன்பின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
ஆனால், அவ்வப்போது ஊடகங்களில் பேட்டி கொடுக்கும் ராஜகுமாரன் எல்லோரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகிறார். ஏற்கனவே விக்ரமெல்லாம் ஒரு நடிகரே இல்லை என சொல்லியிருந்தார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டிகொடுத்த ராஜகுமாரன் ‘கமல்ஹாசன் ஒரு பெரிய நடிகர் இல்லை. அவரின் ஆறு அல்லது ஏழு படங்கள்தான் நன்றாக இருக்கும்’ என கூறினார்.
மேலும், இராமநாராயணன் 100 படங்களை இயக்கியவர். ஆனால், சில படங்களை இயக்கிய மகேந்திரனை பெருமையாக பேசுகிறார்கள். உதிரிப்பூக்கள் படத்தில் கதையென ஒன்றுமில்லை’ என்றெல்லாம் பேசியிருந்தார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பலரும் ராஜகுமாரனை திட்ட துவங்கிவிட்டனர். இவர் எடுத்ததெல்லாம் மொக்க படம். இவர் கமலையும், மகேந்திரனையும் பேசுகிறார் என ட்ரோல் செய்தார்கள்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் விளக்கமளித்த ராஜகுமாரன் ‘நான் பேசியதை சரியாக புரிந்துகொள்ளவில்லை. கமல்ஹசானை சரியாக பயன்படுத்தியது சில இயக்குனர்கள் மட்டுமே. பதினாறு வயதினிலே, சலங்கை ஒலி, நாயகன் போல சில படங்களை மட்டுமே சொல்லலாம். மற்ற படங்களெல்லாம் கமல் தனக்காக உருவாக்கிக் கொண்டது. பாரதிராஜா, கே.விஸ்வநாத் போல வேறு இயக்குனர்கள் அவரை பயன்படுத்தவில்லை என்றுதான் நான் சொன்னேன். அதேபோல், சில படங்கள் இயக்கியிருந்தாலும் அந்த படங்களை இயக்கிய விதத்தில் மகேந்திரன் தனிப்பட்டு நிற்கிறார் என சொன்னேன். சரியாக புரிந்துகொள்ளாமல் என்னை திட்டுகிறார்கள்’ என அந்தர்பல்டி அடித்திருக்கிறார்.