இளையராஜா பாடல்களால் தப்பித்ததா பேரன்பும் பெருங்கோபமும்… திரை விமர்சனம் இங்கே!
Peranbum Perungobamum: இளையராஜா இசையில் தங்கர்பச்சான் மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகி இருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் பாசிட்டிவ் மைனஸ் பேசும் முழு திரை விமர்சனம் இங்கே.
பேரன்பும் பெருங்கோபமும் என்பது உணர்வுப் பூர்வமான ஒரு சமூக அக்கறையோடும் உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம். மூத்த நர்ஸான விஜித் என்பவரின் வாழ்க்கையைச் சொல்லும் கதையாகும்.
அமைதியான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அவரின் வாழ்க்கையில் திடீரென ஒரு பிரச்னை. குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுகிறார்.
தொடக்கத்தில் ஒரு வழக்கமான இன்வெஸ்டிகேட்டிவ் கதையாக தோன்றும். இந்தச் சம்பவம், பின்னால் ஆணவ கொலையால் பயமுறுத்தப்பட்ட ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகள் முன் நடந்த உண்மைகளைக் கூறும் கதையாக மாறுகிறது.
இந்தப் படத்தின் ஹீரோ விஜித் பச்சான். அறிமுகம் என்றாலும் தன்னால் முடிந்த அளவு முழு உழைப்பை கொடுத்து இருக்கிறார். சில இடங்களில் என்ன ரியாக்ஷன் கொடுப்பது என அவர் தயங்குவது அப்பட்டமாக தெரிவது மட்டுமே மைனஸ்.
கதாநாயகியாக வரும் ஷாலி மென்மையாக தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கும் விஜித்துக்குமான கெமிஸ்ட்ரி அழகாக அமைந்துள்ளது.
இயக்குனர் சிவபிரகாஷ் கதையை மிக நுணுக்கமாக கையாண்டு இருக்கிறார். சாதி பாகுபாடு, ஆணவ கொலைகள் போன்ற சென்சிட்டிவான விஷயங்களை படத்தில் சொல்லும் போதும், படம் ஒருபோதும் போதனையாக மாறாமல் கையாண்டு இருக்கிறார்.
கதை இயல்பாகவே செல்கிறது. ஒவ்வொரு ட்விஸ்ட் உடையும் போது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. கதையுடனான பிணைப்பையும் அதிகரிக்கின்றன. திரைக்கதை உணர்ச்சிபூர்வமாக நம்மை கட்டிப்போடுகிறது. அதேசமயம் கதை எங்குமே பிசிறவில்லை.
மைம் கோபி மற்றும் அருள்தாஸ் போன்ற துணை நடிகர்கள் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு மிகுந்த பலத்தை கொடுக்கின்றனர். உண்மைக் சம்பவங்களால் உருவாகி இருக்கும் பேரன்பும் பெருங்கோபமும், வெறும் பழிவாங்கும் கதையல்ல.
இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. துக்கம், நம்பிக்கை, சிந்தனை போன்ற தருணங்களில் அவர் இசை களத்தில் நம்மை அழைத்து செல்கிறது. படம் முடிந்த பிறகும் இசை நம்முடன் இருக்கிறது.