அரச்ச மாவையே அரச்சா அரண்மனை 3! - ரசிகர்கள் என்ன சொம்பையா?...

தமிழ் சினிமாவில் தனது திரைப்படங்களில் கதைக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் இயக்குனர் சுந்தர் சி. காதல், காமெடி இவைதான் அவரின் டிரேட் மார்க். இவரின் திரைப்படங்கள் குறைந்த பட்சம் வெற்றிக்கு உத்தரவாதம் இருப்பதால் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

காமெடி திரைப்படங்களை இயக்கி வந்த அவர் திடீரென ஹாரர் காமெடி எனக்கூறும் நகைச்சுவை கலந்த ‘அரண்மனை’ படத்தை இயக்கினார். ஒரு கிராமத்து பெண் அவள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்ய விரும்புகிறாள். ஆனால், அது நடக்கவில்லை.

அதோடு, அந்த ஊரை சேர்ந்த சில பெரிய மனிதர்கள் அவளை நம்பி ஏமாற்றி பின் அடித்துக் கொலை செய்து ஒரு அரண்மனையில் புதைத்து விடுவார்கள். அவள் பேயாக வந்து அதற்கு காரணமானவர்களை பழி வாங்குவாள். அதோடு, காதலனோடு மீண்டும் சேர திட்டம் போடுவாள்.

aranmanai

அந்த பேய் குழந்தையோடு பந்து விளையாடும், கண்ணாடியில் வந்து பயமுறுத்தும், கொடூரமாக கொலை செய்யும், அதன்பின் ஒரு சாமியார் வருவார், கிரகணம் முடிவதற்குள், அமாவாசை முடிவதற்குள், சூரியன் மறைவதற்குள் என ஏதேனும் ஒன்றை கூறி அதற்குள் இதை செய்தால் மட்டுமே அந்த பேயை அழிக்க முடியும் என்பார். பேய் அதற்குள் கதாநாயகன் உடம்பில் ஏறிவிடும். இறுதியில் பேயின் திட்டத்தை முறியடித்து, பேயோடு சண்டை செய்து, அம்மனின் கிராபிக்ஸ் சக்தியுடன் பேயை அழைப்பார் சுந்தர் சி.

aranmanai

இதுதான் அரண்மனை படத்தில் இருந்தது. இதுவே, அரண்மனை 2விலிரும் இருந்தது. தற்போது அரண்மனை 3லிலும் இதுதான் கதை.

அடப்போங்கப்ப்பா!..

அதிலும், இந்த படத்தின் திரைக்கதை அவ்வளவு மோசம்... முதலில் கதைக்களம் எங்கு நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஆர்யா யார்? அவரின் கதாபாத்திரம் என்ன? என்பதே குழப்பமாக இருக்கிறது. அதோடு, பேயின் கதாபாத்திரமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பச்சை குழந்தையாக இறந்த பேய் ஒன்று இளம்பெண்ணாக வந்து பயமுறுத்துகிறது.

என்னடா பேய் படம்னாலும் ஒரு லாஜிக் வேண்டாமா?..

aranmanai

சுந்தர் சியின் கதாபாத்திரமும் அவ்வளவு சிறப்பாக இல்லை. முதல் 2 பாகங்களில் என்ன செய்தாரோ அதையேதான் இதிலும் செய்துள்ளார். வழக்கம் போல் பேயாக ஆண்ட்ரியா. சில சமயம் பேய் போலவும், சில சமயம் பேய் மேக்கப் இல்லாமல் வந்து பயமுறுத்த முயல்கிறார். பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

அடுத்து, படத்தில் காமெடி என்பது சுத்தமாக இல்லை. இத்தனைக்கும் விவேக், யோகிபாபு, மனோபாலா என 3 பேர் இருக்கிறார்கள். அவர்கள் பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் மாயான அமைதி நிலவுகிறது. அவர்கள் ஏதேதோ செய்கிறார்கள். ஆனால், சிரிப்புதான் வரவில்லை. படத்தில் பாடல்களும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

aranmanai

மொத்தத்தில் ஒரே கதை, சொதப்பலான திரைக்கதை, சிரிக்க வைக்காத காமெடி காட்சிகள் என அரண்மனை 3 ரொம்பவும் சோதிக்கிறது...

பேய் படங்களில் இருந்து எங்களை யாராவது காப்பாத்துங்கப்பா என கத்த தோன்றுகிறது.

விஜயகாந்த கேட்ட கேள்வியை நாம் கொஞ்சம் மாற்றி கேட்க வேண்டியிருக்கிறது..

ரசிகர்கள் என்ன சொம்பையா?...

 

Related Articles

Next Story