தமிழ் சினிமா இயக்குனர்களாலும், ரசிகர்களாலும் திரைக்கதை மன்னன் என அழைக்கப்பட்டவர் கே.பாக்யராஜ். தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பாரதிராஜாவிடம் சினிமா கற்றவர் இவர். பாரதிராஜா இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.. அந்த படங்களின் கதை உருவாக்கம், திரைக்கதை, வசனங்களில் பாக்யராஜுக்கு முக்கிய பங்குண்டு..
பாக்யராஜ் நடிகராக மாற்றியது பாரதிராஜாதான்.. ஒரு கட்டத்தில் தானே படங்களை இயக்கி தானே ஹீரோவாக நடிக்க துவங்கினார் பாக்யராஜ். அவரின் படங்களுக்கு பெண்களிடம் அமோகமான வரவேற்பு இருந்தது.. குறிப்பாக அந்த ஏழு நாட்கள், தாவணிக் கனவுகள், சின்ன வீடு, முந்தானை முடிச்சு போன்ற படங்கள் வசூலை அள்ளியது. அவர் இயக்கும் படங்களில் மட்மில்லாமல் பல இயக்குனர்கள் இயக்கிய படங்களின் கதை வாதங்களில் பங்கேற்று பல திருத்தங்களை பாக்யராஜ் கூறியிருக்கிறார்..
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக கருதப்படும் ஆர்.சுந்தர்ராஜன் சமீபத்தில் நடித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார். ‘நானும் பாக்யராஜும் நண்பர்கள்.. ஊரில் ஒன்றாகத்தான் ஊரை சுற்றிக் கொண்டிருப்போம்.. எங்கள் இருவருக்குமே சினிமாவில் போய் சேரவேண்டும் என்கிற ஆசை இருந்தது. நிறைய கதைகளை பேசுவோம்.. 1974ம் வருடம் பாலச்சந்தர் இயக்கத்தில் அவள் ஒரு தொடர்கதை படம் வெளியானது.
அந்த படத்தை பார்த்துவிட்டு ‘நாம டைரக்டர் ஆகியே ஆகணும்’ என இருவரும் முடிவு செய்தோம். அதன்பின்னர்தான் இருவரும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடினோம்.. பாரதிராஜாவுக்கு ஒரு உதவி இயக்குனர் தேவைப்பட்டார். எனக்கு வந்த வாய்ப்பு அது. ஆனால், நான் பாக்யராஜை அனுப்பி வைத்தேன். அவர் பெரிய இயக்குனராக மாறிவிட்டார்’ என பேசியிருக்கிறார்.





