60களில் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய காமெடி படம்... உருவானதுக்குக் காரணமே அந்த நடிகைதான்!..
![Bama vijayam Bama vijayam](https://cinereporters.com/wp-content/uploads/2024/02/Bama-vijayam.jpg)
Bama vijayam
கூட்டுக்குடும்ப வாழ்க்கையையும் அதில் நடக்கும் கூத்துகளையும் நகைச்சுவை கலந்து அட்டகாசமாக எடுத்த காமெடி படம் பாமா விஜயம். 1967ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் செம மாஸாக இருந்தது. அப்போது இது ஒரு கிளாசிக் காமெடி படமாக இருந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. முத்துராமன், நாகேஷ், சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, ராஜஸ்ரீ, சச்சு, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
விருந்தாளியாகக் கூட்டுக்குடும்பத்தில் நுழைகிறாள் சினிமா கதாநாயகி. இவள் தான் அத்தனை குழப்பங்களுக்கும் காரணம். சினிமா மோகத்தால் குடும்ப உறுப்பினர்கள் அவதிப்படுகின்றனர். இது காட்சிக்குக் காட்சிக் காமெடியில் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறது. படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயிண்ட் விதவிதமான திரைக்கதையும், வசனமும் தான்.
இதுவரை நாம் மேஜர் சுந்தரராஜனை சீரியஸாகத் தான் பார்த்திருப்போம். ஆனால் இந்தப் படத்தில் இவர் இந்தி பண்டிட்டாக வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுகிறார். அதே போல டிஎஸ்.பாலையாவின் 3 மகன்களாக மேஜர் சுந்தரராஜன், முத்துராமன், நாகேஷ் வருகின்றனர். அவரது மருமகள்களாக சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி ஆகியோர் வருகின்றனர்.
![Sowcar, Balachandar](https://cinereporters.com/wp-content/uploads/2024/02/Sowcar-Balachandar.jpg)
Sowcar, Balachandar
காஞ்சனாவின் தங்கையாக சச்சு வருகிறார். இவரது பிள்ளைகளுளாகவும் கதாபாத்திரங்கள் வருகின்றன. எல்லோரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகில் சினிமா நடிகை ராஜஸ்ரீ தங்க வருகிறார்.
இவரோ பகட்டான வாழ்க்கைக்கு ஆசைப்படாமல் எளிமையாக இருக்கிறார். ஆனால் இவரை இம்ப்ரஸ் செய்ய சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி செய்யும் வேலைகள் எல்லாம் அட்டகாசமாக இருக்கின்றன. அதுதான் பெரிய கலாட்டாவையும் உண்டாக்குகின்றன. பெண்கள் தான் இப்படி என்றால் கணவர்கள் செய்யும் சேட்டைகள் இன்னும் மாஸாக இருக்கின்றன. மேஜருக்கு தான் நடிகராக ஆசை என்கிறார். முத்துராமனோ தனது கம்பெனிக்கு நீ தான் மாடல் என்கிறார்.
நாகேஷூம் இதற்கிடையே வந்து லூட்டி அடிக்கிறார். இதற்கிடையே ராஜஸ்ரீ மேனேஜராக வரும் ஸ்ரீகாந்துக்கும், சச்சுவுக்கும் இடையே காதல் மலர்கிறது. முதல் பாதி காமெடி கலாட்டா என்றால் 2ம் பாதி மொட்டைக் கடிதத்தால் கதையை சீரியஸ் ஆக்குகிறது.
இந்தப்படம் உருவாக என்ன காரணம்னு பார்த்தால் அதுவே ஒரு தமாசு தான். இயக்குனர் பாலசந்தர் வீட்டுக்கு ஒருமுறை சௌகார் ஜானகி வந்தாராம். அப்போது குடும்பமே கலகலப்பானதாம். அதை மனதில் வைத்துத் தான் பாமாவிஜயத்தையே எடுத்தாராம் பாலசந்தர். எம்எஸ்வி.யின் இசையில் வரவு எட்டணா பாடல் செம மாஸ். எக்காலத்துக்கும் பொருந்தும் ரகம்.