பாகவதர் நடிப்பை விமர்சனம் செய்த பத்திரிக்கையாளர்!.. தியேட்டருக்கு வரவழைத்து என்ன செய்தார்கள் தெரியுமா?..

tk
தமிழ் சினிமாவில் அப்பவே சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நடிகர் தியாகராஜ பாகவதர். சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி சிறந்த மனிதராகவே வாழ்ந்தார். சினிமா ,அரசியல் இவைகளின் மீது நாட்டம் கொண்ட யாரேனும் இன்னும் அதைப் பற்றி தெரிய வேண்டும் என விரும்பினால் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறை புரட்டிப் பார்த்தாலே புரியும்.
1934 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமான பாகவதர், ஹரிதாஸ் என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை பெற்றார் .அந்த படம் 3 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது. அது மட்டும் அல்லாமல் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்திய படம் என்ற சரித்திரத்தையும் படைத்தது.

tk1
அன்றைய காலகட்டத்தில் நாடகம்தான் அதிக அளவில் பெரும் வரவேற்பை பெற்றதனால் திரைப்படத்தில் நடிக்க வரும் நடிகர்கள் பெரும்பாலும் நடிப்பையும் தாண்டி பாடவும் தெரிந்தவர்களாக இருந்தனர்.நடிப்புடன் பாடலையும் கற்றுக்கொண்டு பாட்டு பாடுவதில் கைதேர்ந்தவர்களாக விளங்கினார் பாகவதர்.
இந்த நிலையில் பாகவதரை பற்றி அப்போது இருந்த ஒரு பத்திரிக்கை விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தது. அனுமான் என்ற பெயரில் ஓடிக்கொண்டிருந்த அந்தப் பத்திரிக்கையில் சினிமா பற்றிய தகவலை குண்டூசி என்ற பெயரில் தனியாக வெளியிட்டு வந்தனர். அந்த பத்திரிக்கையை நடத்தியவர் கோபாலன் என்ற ஒரு பத்திரிக்கையாளர்.
அசோக் குமார் என்ற படத்தில் நடித்த பாகவதர் அந்தப் படத்தில் ஒரு காட்சியில் குழந்தை என்பதற்கு பதிலாக குலந்தை என பாகவதர் கூறியிருந்தார் என்று அவரைப் பற்றிய விமர்சனத்தை அந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதைப் பார்த்த அந்த படத்தின் நிறுவனமான முருகன் டாக்கீஸ் அந்த பத்திரிக்கையாளரை அழைத்து "பாகவதர் குழந்தை என்று சரியாகத்தான் உச்சரித்து இருக்கிறார் .வேண்டுமென்றால் அந்த படத்தை மீண்டும் ஒருமுறை போட்டு காட்டுகிறேன் பாருங்கள்" என்று அந்த பத்திரிகையாளரை தியேட்டருக்கு வரவழைத்தாராம்.

tk2
அந்த பத்திரிக்கையாளர் கோபாலும் தியேட்டரில் அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் பாகவதரும் அமர்ந்திருந்தார். அப்போது பாகவதர் பத்திரிக்கையாளர் கோபாலுக்கு வணக்கம் தெரிவித்ததோடு அவர்கள் ஏற்கனவே நன்கு அறிமுகம் ஆனவர்களாகவே இருந்திருக்கின்றனர். ஏனெனில் சிந்தாமணி என்ற பாகவதர் நடித்த படத்தை பற்றி கோபாலன் ஏகப்பட்ட விமர்சனங்களை எழுதி இருந்தார். அதன் மூலமாகவே இருவரும் ஒருவருக்கொருவர் நட்பு கொண்டிருந்தனர்.
அப்போது பாகவதர் கோபாலனிடம் "உங்கள் பத்திரிக்கையில் குண்டூசி என்ற பெயரில் எழுதி வரும் பத்திரிகையாளர் யார்" என கேட்க அதற்கு கோபாலன் "அந்த பெயரில் நான் தான் எழுதி வருகிறேன்" என்று கூறினாராம். உடனே பாகவதர் "ஆமாம் உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? என்னை ஏன் அவ்வாறெல்லாம் விமர்சனம் செய்துள்ளீர்கள்? "என்று கேட்டாராம் .
அதற்கு கோபாலன் "பாடினால் மட்டும் போதாது உங்களின் நடிப்பும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதற்காகவே அந்த விமர்சனத்தை எழுதினேன் "என்று கூறினாராம் .பாகவதரோ நடிப்பை தாண்டி எனக்கு பாட தான் நன்றாக வரும். ஆதனால் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டியதுதானே என்று கூறினாராம்.
அதற்கு அந்த பத்திரிகையாளர் "எங்களுடைய வேலையே நல்லது எது கெட்டது எது என பிரித்துப் பார்த்து சொல்வது தான். அதனால் நீங்கள் நடிப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறிவிட்டு அடுத்த வாரம் வெளியான அந்த பத்திரிக்கையில் அவர் எழுதியிருந்த விமர்சனத்திற்கு வருத்தம் தெரிவித்து கோபாலன் அறிக்கை வெளியிட்டாராம். இந்த சுவாரஸ்ய தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் கூறினார்.