அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கியவர் இளையராஜா. 80களில் இவரின் இசைக்கொடிதான் கோலிவுட்டில் பறந்தது. அப்போது வெளியான 90 சதவீத படங்களுக்கு இவர்தான் இசை. இளையராஜாவின் இசையை நம்பியே அப்போது பல படங்களும் உருவாகியது. ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன், சத்யராஜ், பிரபு என 80, 90களில் முக்கிய நடிகர்களாக இருந்த எல்லோருமே தங்களது படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையை நம்பியிருந்தார்கள்.
இளையராஜா ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால் அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார்.. அதேபோல் அவரின் சுபாவத்தையும் யாராலும் மாற்ற முடியாது. அவ்வளவு பிடிவாதம் கொண்டவர் அவர். அதனாலேயே பல விமர்சனங்களை அவர் சந்தித்திருக்கிறார். இந்நிலையில் பாக்யராஜ் தன்னை மாற்றியதாக இளையராஜாவை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார்..

‘ஒருமுறை பாரதிராஜா கதை சொல்ல முடியாமல் போக பாக்யராஜ் கதை சொல்ல வருவான் என என்னிடம் சொன்னார்.. நான் ‘ஏன்இப்படி கண்டவர்களையெல்லாம் கதை சொல்ல வைக்கிற?’ என்று கேட்டேன்.. ஆனால் பாக்யராஜ் வந்து கதையை சொன்ன போது அசந்து போனேன். எனது வாழ்க்கையில் ஒருவர் கதை சொல்வதைப் பார்த்து நான் மிகவும் வியந்தவர்களில் பாக்யராஜ் ஒருவர்.
‘யாருக்கு என்ன திறமை இருக்கும் என்பதை தீர்மானிக்க நான் யார்?’ என்ற கேள்வி அப்போது எனக்கு எழுந்தது.. அப்போதிலிருந்து புதிய இயக்குனர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு படம் பண்ணுவது என முடிவெடுத்தேன்.. நான் இந்த முடிவை எடுக்க பாக்யராஜ்தான் காரணம்.. எனக்கு பாடம் கற்பித்தவர் அவர்’ என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் இளையராஜா..
