போய் நிஜமான இயக்குனரை வர சொல்லுங்க!.. இயக்குனரையே கலாய்த்த பானுமதி!...

Bhanumathi
பானுமதி பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் என்பதை பலரும் அறிவார்கள். அவர் நடிகை மட்டுமல்லாது ஒரு மிகச்சிறந்த பாடகியும் கூட. அதே போல் யாராக இருந்தாலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவாராம் பானுமதி. இந்த நிலையில் சிவாஜி கணேசன் படத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
1957 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பானுமதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “மக்களை பெற்ற மகராசி”. இத்திரைப்படத்தை சோமு என்பவர் இயக்க, ஏ.பி.நாகராஜன் கதை வசனம் எழுதியிருந்தார்.

Makkalai Petra Magarasi
இத்திரைப்படத்திற்கு சோமு இயக்குனர் என்றாலும், இத்திரைப்படத்தின் இயக்கத்தில் ஏ.பி.நாகராஜனுக்கு அதிக பங்கு இருந்ததாம். கிட்டத்தட்ட ஏ.பி.நாகராஜன்தான் இத்திரைப்படம் உருவாவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

AP Nagarajan
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பின்போது ஒரு நாள் மேகங்கள் சூரியனை மூடிக்கொண்டதாம். வெளிச்சம் போதவில்லை என்பதால் வெளிச்சம் வந்தபிறகு படமாக்கலாம் என தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்களாம். இந்த இடைப்பட்ட வேளையில் அனைத்து கலைஞர்களும் ஓய்வெடுக்க ஏ.பி.நாகராஜன் தனது உடலின் இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள சென்றுவிட்டாராம்.

Bhanumathi
அதன் பின் சில நிமிடங்களிலேயே மேகம் விலகிக்கொள்ள, படப்பிடிப்பு தொடங்கியது. அனைத்து கலைஞர்களையும் இயக்குனர் சோமு அழைக்க, பானுமதி மட்டும் எழுந்து வரவில்லையாம். சோமு அவரின் அருகில் சென்று, “அம்மா, வாங்க படப்பிடிப்பை தொடங்கலாம், சூரிய வெளிச்சம் வந்துவிட்டது” என கூறினார். அதற்கு பானுமதி, “சூரிய வெளிச்சம் வந்திடுச்சு, ஆனால் உண்மையான இயக்குனர் இன்னும் வரவில்லையே” என ஏபி நாகராஜனை குறிப்பிட்டு கூறினாராம். இவ்வாறு அத்திரைப்படத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது ஏ.பி.நாகராஜன்தான் என்பதை அத்திரைப்படத்தின் இயக்குனரிடமே வெளிப்படையாக கூறியுள்ளார் பானுமதி.
இதையும் படிங்க: கதாசிரியரை அவமானப்படுத்திய நாகேஷ் – பதிலுக்கு அவர் செய்ததுதான் ஹைலைட்