More
Categories: Cinema News latest news

சினிமாவை விட்டு விடுங்கள்!.. அன்புமணி ராமதாஸுக்கு பாரதிராஜா கோரிக்கை…

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் இடம் பெற்ற காவல் ஆய்வாளரின் பெயர் ஒரு குறிப்பிட்ட சாதியை குறிப்பதாகவும், இப்படத்தின் ஒரு காட்சியில் அந்த காவல் ஆய்வாளரின் வீட்டில் வன்னியர்களின் அக்கினிக் கலச காலண்டர் வைக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சூர்யாவிடம் விளக்கம் கேட்டு அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதினார்.

இதற்கு பதிலளித்த சூர்யா‘எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை’ என தெரிவித்தார்.

Advertising
Advertising

\

ஆனாலும், சூர்யாவை பாமகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் தருகிறேன் என ஒரு மாவட்ட செயலாளர் பேட்டி கொடுத்தார். மேலும் சூர்யா ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து மெல்ல மெல்ல சூர்யாவுக்கு திரைத்துறையின் ஆதரவு கிடைத்து வருகிறது. சூர்யா மீது வன்மம் காட்ட வேண்டாம் என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில் ‘எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை. சினிமாவை விட்டு விடுங்கள். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்துங்கள். இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள்.

எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி!’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts