Categories: Cinema News latest news

பாண்டியனுக்கு பாரதிராஜா அறை விட, ரேவதிக்கு பாண்டியன் அறை விட… படப்பிடிப்பில் நிகழ்ந்த களேபரம்..

கடந்த 1983 ஆம் ஆண்டு பாண்டியன், ரேவதி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன திரைப்படம் “மண் வாசனை”. இதில் விஜயன், காந்திமதி, நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி என பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.

பாண்டியன், ரேவதி ஆகிய இருவரும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான முதல் திரைப்படம் “மண் வாசனை” தான். முதல் திரைப்படம் எந்த நடிகருக்கும் சவாலான காரியமே. அதுவும் பாரதிராஜா சரியாக நடிக்கவில்லை என்றால் அடிக்ககூட தயங்க மாட்டார் என கூறுவார்கள்.

இந்த நிலையில் “மண் வாசனை” திரைப்படத்தின் போது ஒரு களேபர சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஒரு காட்சியில் பாண்டியன் ரேவதியை கன்னத்தில் அறைய வேண்டும். பாண்டியன் பல டேக்குகள் வாங்கியும் ரேவதியை சரியாக அறையவில்லை. இதனால் கோபமான பாரதிராஜா இந்த காட்சி உயிர்ப்போடு வரவேண்டும் என எண்ணி பாண்டியனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார்.

பாரதிராஜா ஓங்கி அறைந்ததில் கோபமான பாண்டியன் அப்படியே திரும்பி ரேவதியை ஓங்கி அறைந்திருக்கிறார். என்ன தான் இந்த சம்பவம் ஒரு களேபர சம்பவமாக இருந்தாலும் அந்த காட்சி படத்தில் உயிர்ப்புடன் வந்திருக்கிறது.

இதே போல் “மண் வாசனை” படப்பிடிப்பின் போது மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. அதாவது கிளைமேக்ஸ் காட்சியில் ரேவதி கத்தி அழுகவேண்டும். ரேவதியின் நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரதிராஜா ரேவதியை ஓங்கி அறைந்திருக்கிறார். அந்த வலியிலேயே ரேவதி அழுதிருக்கிறார். அந்த காட்சி மிகவும் சிறப்பாகவும் அமைந்துவிட்டது.

Published by
Arun Prasad