தமிழ் சினிமாவில் டாப் ஸ்டராக உள்ள விஜய் திடீரென அரசியல் ஆசை ஏற்படவே தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டமும், ரசிகர்களின் ஆரவாரமும் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது.
தங்களுக்கு பிடித்த நடிகரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில், ரசிகர்கள் காட்டும் அதீத ஆர்வம் பல நேரங்களில் விபரீதத்தில் முடிகிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால், விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஏறி நிற்பதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக மரங்கள், மதில் சுவர்கள், கடைகளின் மேற்கூரைகள், ஆபத்தான விளம்பர பலகைகள் என எதையும் விட்டுவைக்காமல் ஆபத்தை துளியும் உணராமல் ரசிகர்கள் ஏறி நின்று கோஷமிடுகின்றனர். இதனால் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பலரும் விஜய் ரசிகர்களின் இந்த செயல்களை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், விஜய்யையும் அவரது ரசிகர்களையும் தொடர்ந்து ட்ரோல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்தும், அவரது ரசிகர்கள் ‘அணில்கள்’ என கிண்டல் செய்தும் தனது எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி நக்கலான கருத்துக்களைப் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்துவது அவரது வழக்கம்.
இந்த நிலையில் நாளை விஜய் பிரச்சாரத்திற்காக காரைக்குடிக்கு செல்லவுள்ள நிலையில், ரசிகர்கள் மரங்களில் ஏறுவதை தடுக்க அவ்ர் செல்லும் சலைகளில் உள்ள மரங்கள் அனைத்திற்கும் இரும்பு தகடுகளால் சுற்றப்பட்டு யாரும் மரத்தில் ஏறாதவாறு பாதுகாப்பிற்காக செய்யப்பட்டுள்ளது. இதனை கலாய்க்கும் விதமாக புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் காரைக்குடியில் நாளை விஜய். மரங்களுக்கு Z+ பாதுகாப்பு. அணில்குஞ்சுகள் ஏமாற்றம் என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.
வழக்கம் போல இந்த பதிவின் கீழும் விஜய் ரசிகர்களுக்கும், ப்ளூ சட்டை மாறன் ஆதரவாளர்களுக்கும் இடையே அனல்பறக்கும் கருத்து போர் நடந்து வருகிறது.
காரைக்குடியில் நாளை விஜய். மரங்களுக்கு Z+ பாதுகாப்பு. அணில்குஞ்சுகள் ஏமாற்றம்.pic.twitter.com/7kTLsnsPmY
— Blue Sattai Maran (@tamiltalkies) April 9, 2026





