Kaantha: ஓடாத படத்துக்கு சக்சஸ் மீட்!.. காந்தாவை கலாய்க்கும் திரையுலகம்!...
கடந்த பல வருடங்களாகவே சிறந்த கதைகளையும், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இவரின் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான திரைப்படம்தான் காந்தா. பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர் வாழ்வில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை மட்டும் அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார். பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி, ராணா ரகுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
60 கால கட்டங்களில் கதை நடப்பது போல காட்டியிருந்தார்கள். படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளியானது. படத்தைப் பொறுத்தவரை துல்கர் சல்மானின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். ‘இந்த வருடம் நான் பார்த்ததிலேயே சிறந்த படம்.. துல்கர் சல்மானை போல யாராலும் நடிக்க முடியாது’ என்றெல்லாம் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். அதேநேரம் இந்த படம் ஒரு கலைப்படமாக உருவாகியிருந்ததால் ஜனரஞ்சகமான படங்களை ரசிக்கும் ரசிகர்களை இந்த படம் கவரவில்லை. எனவே இந்த படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை.

ஆனாலும் படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் 25 கோடி வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல சமீபத்தில் படத்தின் சக்சஸ் விழாவையும் கொண்டாடினார்கள். ஆனால் உண்மையில் படம் அந்த அளவு வசூலை பெறவில்லை என்றே சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். கண்டிப்பாக இந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான். ஆனால் அதை சொல்லாமல் பொய்யாக சக்சஸ் மீட் நடத்துகிறார்கள் என்கிறார்கள்.
