அஜித் கேட்கும் சம்பளம்!. தலதெறிக்க ஓடும் தயாரிப்பு நிறுவனங்கள்!.. ஏகே செய்வது சரியா?!...

ajith
Ajithkumar: சினிமா உலகில் நடிகர்களுக்கான சம்பளம் என்பது பல கோடிகளுக்கு உயர்ந்துவிட்டது. அதுவும் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு சம்பளம் எக்குதப்பாக எகிறி வருகிறது. அமராவதியில் அறிமுகமான போது அஜித் வாங்கிய சம்பளம் 40 ஆயிரம். அதன்பின் சில லட்சங்கள் வாங்கினார்.
சினிமாவில் ஒரு நடிகரின் சம்பளம் என்பது அவரின் படங்கள் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்தே அமையும். அஜித்தின் படங்கள் தொடர் வெற்றியை பெறுவது இல்லை. அவரின் வலிமை படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அடுத்து வந்த துணிவு படம் வெற்றி பெற்றது. அடுத்து வந்த விடாமுயற்சி படம் தோல்வி அடைந்தது. அடுத்து வந்த குட் பேட் அக்லி ஓரளவுக்கு வசூலை பெற்றாலும் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை.
ஆனாலும், அஜித் படத்திற்கு படம் தனது சம்பளத்தை ஏற்றிகொண்டே போகிறார் என்கிறார்கள். அதற்கு காரணம் விஜய் வாங்கும் சம்பளம்தான். அஜித் விஜயையே தனது போட்டி நடிகராக கருதுகிறார். விஜய்க்கு என்ன சம்பளம் என தெரிந்துகொண்டு அதிலிருந்து சில கோடிகள் குறைத்து கேட்கிறார் என்கிறார்கள்.
வாரிசு படத்திற்காக விஜய் 110 கோடி சம்பளம் வாங்கிய போது அதே படத்தோடு வெளிவந்த துணிவு படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் 70 கோடி சம்பளம் வாங்கினார் என சொல்லப்பட்டது. அஜித்தின் சம்பளம் முதன் முதலாக 100 கோடியை தாண்டியது விடாமுயற்சி படத்தில்தான். விஜயோ இப்போது 200 கோடி சம்பளத்தை தாண்டிவிட்டார். ஜனநாயகன் படத்திற்காக 200 கோடி மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து 225 கோடி வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.
எனவே, அஜித்தும் 175 கோடி வரை சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் அவரின் அடுத்த படத்திற்கு யார் தயாரிப்பாளர் என்பது இதுவரை முடிவாகவில்லை என்கிறார்கள். ஏனெனில், இந்த படத்திற்கு ஆதிக் சொல்லும் பட்ஜெட் 275 கோடி. குட் பேட் அக்லி படத்தால் தயாரிப்பாளருக்கு 60 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள். எனவேதான் அந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித் - ஆதிக் படத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது.
அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் நஷ்டம் ஏற்படும் என கணக்குப்போட்ட வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் ஒதுங்கிக்கொண்டது. அதேபோல், அஜித்தை வைத்து பல படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் ஒதுங்கிக்கொண்டது. எனவேதான், தனது சொந்த செலவில் ஆதிக்கிற்கு ஆபிஸ் போட்டு கொடுத்திருக்கிறார் அஜித். அங்குதான் இப்போது படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருகிறது.